‛கடவுளே அஜித்தே’ என கோஷம் போடாதீங்க.. கவலையோடு நடிகர் அஜித் குமார் அறிக்கை! ரசிகர்களுக்கு அட்வைஸ்
சென்னை: கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடைய வைக்கிறது. என் பெயருடன் வேற எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதை நான் விரும்புவது இல்லை. என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று அஜித் ரசிர்களுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் விடா முயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக அஜித் குமார், ‛குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அஜித்துடன் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்பட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தான் சமீபகாலமாக நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள், ‛கடவுளே அஜித்தே' என கோஷமிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ‛கடவுளே அஜித்தே' என்ற கோஷம் கவலையடைய வைப்பதாகவும், அதனை கைவிட வேண்டும் என்றும் நடிகர் அஜித் குமார் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளிகளில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‛க..... அஜித்தே'' என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்!
வாழு & வாழ விடு!
அன்புடன் அஜித் குமார்'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நடிகர் அஜித் குமார் தனது பெயருடன் பிற பெயரை சேர்த்து அழைப்பதை விரும்புவது இல்லை. மேலும் நடிகர் அஜித் குமார் இப்படி அறிக்கை விடுவது இது முதல் முறையல்ல. ஏனென்றால் இதற்கு முன்பு நடிகர் அஜித் குமாரை ரசிகர்கள் ‛தல' என பாசத்துடன் அழைத்து வந்தனர். அதனை அஜித் குமார் விரும்பவில்லை. இதனால் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் ஏகே என்று அல்லது அஜித் குமார் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல் இப்போது ‛கடவுளே அஜித்தே' என்ற கோஷம் வேண்டாம் என்று அஜித் குமார் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications