ராகுலை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது… கே.எஸ். அழகிரிக்கு தமிழிசை பதிலடி
சென்னை: அடிமட்ட தொண்டனாக படிப்படியாக அரசியலில் உயர்ந்த தனக்கு, குடும்ப அரசியலில் இருந்து வந்த ராகுலை விமர்சிக்க எல்லா தகுதியும் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்க எந்த தகுதியும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதற்கு பதில் அளித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இலங்கை தமிழர் பிரச்சினையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிப்பதாகவம் அழகிரி சாடியிருந்தார்.
மேலும் இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது என்றும் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ? என்றும் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்ப வாரிசு என்ற ஒரு தகுதியை மட்டும் கொண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்திக்கு கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
ஆனால் நான் யாரிடமும் சிபாரிசு கேட்காமல் அடிமட்ட தொண்டராய் படிப்படியாக உயர்ந்து அரசியலில் சுயபுத்தியுடன் பகுத்தாய்ந்து பாதை வகுத்து உயர்ந்து இருக்கிறேன்.
இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு ராகுலை விமர்சிக்க எல்லா தகுதியும் இருக்கிறது. இந்த விஷயம் கே.எஸ். அழகிரிக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாகவே புரியும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications