கலையரசனுக்கு உள்ள அதே பிரச்சினை எனக்கும் இருக்கிறது..? உண்மைதான்..! ரஞ்சித் ரியாக்ஷன்
சென்னை: இயக்குநர் ரஞ்சித் படங்களில் நடிப்பதால் வேறுசிலர் வாய்ப்பு தர மறுக்கிறார்கள் என்று நடிகர் கலையரசன் கூறியிருந்த கருத்திற்கு இப்போது ரஞ்சித் பதிலளித்திருக்கிறார்.
இயக்குநர் ரஞ்சித் திரைப்படங்களில் நடித்த பல நடிகர்கள் அவர் மூலமே தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தைப் பெற்றுள்ளனர். அட்டகத்தி' படத்தில் நடித்த தினேஷ் அதில் முக்கியமான நடிகர். கலையரசன், ஜானி என்ற ஹரி எனப் பலரை சொல்லலாம். அதேபோல அவர் கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் என பலரையும் அறிமுகம் செய்துள்ளார்.

இவரது படங்களில் எப்போது உடன் இருக்கும் சில முகங்கள் இருக்கிறார்கள். இதேபோல விசு படங்களில் கூட ஒரே முகங்களை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இயக்குநர் பாலசந்தர் படங்களிலும் சிலர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது எல்லாம் எழாத பிரச்சினை ரஞ்சித் படங்களில் இப்போது எழுந்துள்ளது.
அவர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே தன் படங்களில் முன்னிறுத்துகிறார் என்று. அதேபோல அவர் படங்களில் பணியாற்றிய நடிகர்களை வேறு சிலர் வாய்ப்பு தர தயங்குகிறார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. சமீபத்தில் 'மெட்ராஸ்' படத்தில் ஜானி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் ஹரி கிருஷ்ணன் பற்றி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. பலரால் அவரது வீடியோ பகிரப்பட்டது. இவரைப் போன்ற நடிகர்கள் ரஞ்சித் படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள் என்று ஒரு வாதம் அதிலும் முன்வைக்கப்பட்டது.
நடிகர் கலையரசன் கூட தனக்கு வாய்ப்பு தர தயங்குகிறார்கள் என ஒரு கருத்தைக் கூறி இருக்கிறார். கலையரசன் இது பற்றி, "இதற்குள் ஒரு அரசியல் விசயம்கூட ஒளிந்துள்ளது. இங்கே என்ன சொல்கிறோம் என்பதைவிட, யார் சொல்கிறார்கள் என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்கிறார்கள். எனக்குக்கூட இதே மாதிரியான பிரச்சினைகள் வந்துள்ளது.
நான் அதிகம் ரஞ்சித் படங்களை ஒட்டியே பேசப்படுகிறேன். அதனால் சிலர் வாய்ப்பு தர மறுப்பதும் நடந்துள்ளது. நான் ஒரு படத்தில் வேலை செய்கிறேன். அது ஒரு வேலை. அதை வேலையாக மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மீறி அதற்கு ஒரு சாயம் பூசுகிறார்கள். அதைக் கேட்கும்போது இதைப் போன்ற சமூகத்தில் நாம் இருக்கிறோமே என்று அசிங்கமாகவே நினைக்கத் தோன்றுகிறது.
ரஞ்சித் படத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே நடிக்கிறார்கள் என ஒரு முத்திரையைக் குத்த பார்க்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை 'சார்பட்டா'வில் பலரை அவர் நடிக்க வைத்துள்ளார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு திறமையான ஆளா என்றுதான் பார்ப்பார். ஆனால், ஒரு குறிப்பிட்டவர்களை மட்டுமே நடிக்க வைக்கிறார் என வேண்டும் என்றே சொல்கிறார்கள். அவர் படத்தில் நடிப்பதால் வேறு படங்களில் வாய்ப்பு தரக் கூட தயங்குகிறார்கள். இங்கே எல்லோரும் சமம் என்று நம்புகிறோம். அப்படி பேசுபவர்களுடன் சேர்ந்து நிற்கிறோம். இங்கே ஒரு சாதி, மதம் என்று இல்லை. உலகம் முழுக்க உள்ளவர்கள் சமம். அதைப் பேசுவதால் சிலர் வெறுக்கிறார்கள். அது இருக்கவே செய்கிறது" என்று பதிலளித்திருக்கிறார்.
கலையரசனின் இந்த ஆதங்கம் பற்றி இப்போது இயக்குநர் ரஞ்சித் பதிலளித்துள்ளார். அவர் இந்த விவகாரம் பற்றி பேசுகையில், "இங்கே பல விசயங்கள் சினிமாவில் பிரச்சினையாகவே இருக்கிறது. எனக்கு மட்டும் எல்லா தயாரிப்பாளர்களும் பட வாய்ப்பு தந்துவிடுவதில்லை. அதேபோன்று எல்லா நடிகர்களும் என் படத்தில் நடிக்க வந்துவிட மாட்டார்கள். கலையரசனுக்கும் ஹரிக்கும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் உள்ளன. இல்லை என்று சொல்ல முடியாது. அதைப்போலவே இதை மாதிரியான பாதிப்பும் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
இந்தப் பாதிப்புகளை பெரியதாகப் பேசி உள்ள வாய்ப்பைக் கெடுத்துக் கொள்ளவும் கூடாது. என்னைப் பொறுத்தவரை இதை நாம் எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. அவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே இதை நாம் பாசிடிவ் ஆக எடுத்துக் கொள்வோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications