அதிமுக மாஜி அமைச்சர் வைகைச்செல்வனை சந்தித்தது ஏன்? போட்டு உடைத்த திருமாவளவன்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை ஏன் சந்தித்தேன் என்பது பற்றி தொல் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். திருச்சியில் ஓட்டல் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுடன் சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், 'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் என்னால் சொல்ல முடியும்' என்று பதிலளித்தார். இதற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் விசிகவை தங்கள் அணிக்கு இழுக்க அதிமுக மற்றும் தவெக கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. எனினும், இதில் தற்போது வரை எந்த பலனும் கிட்டியதாக தெரியவில்லை. எனினும், திமுக கூட்டணியில் அதிக இடங்களை இந்த முறை கேட்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசி வருகிறார்.

இதற்கிடையேதான், நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சரும் திருமாவளவனும் சந்தித்து பேசினர். திருச்சியில் ஒரே விடுதியில் தங்கியதால், அவர் ஒரு புத்தகம் கொடுத்தார். அப்போது அவரின் இலக்கியப் பணிகள் குறித்து பேசியதாக திருமாவளவன் பேசியிருந்தார். இந்த நிலையில்தான், வைகை செல்வன் இன்று வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வைகைச்செல்வன், "ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் என்னால் சொல்ல முடியும்" என்று கூறினார். வைகைச்செல்வனின் இந்த கருத்து தமிழ்க அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளானது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், "திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். நாங்கள் தனியாக நிற்போம். எங்கள் கொள்கைக்காகத்தான் நாங்கள் நிற்கிறோம்" என்று கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில் திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன் வெளியிட்ட கருத்து பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்ட நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திருமாவளவன் கூறியதாவது:-
நட்பின் அடிப்படையில் தான் அதிமுகவின் வைகைச்செல்வனை சந்தித்தேன். நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் கிடைத்தது. வைகைச்செல்வனுடன் பேசினேன், அவ்வளவுதான். வைகைச்செல்வனுடன் அரசியல் குறித்து பேசவில்லை" என்றார்.
மேலும் திருமாவளவன் கூறுகையில், "தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு எப்போதும் இடம் இல்லை என்பதுதான் வரலாறு. மதத்தின் பெயரால் பிரச்சினையை கிளப்ப சங் பரிவார் அமைப்புகள் முயற்சி செய்கின்றன. திருப்பரங்குன்றத்தில் இந்து - முஸ்லீம்கள் இடையே எந்த முரண்பாடும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications