விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன்.. தேர்தல் வாக்குறுதியை பார்த்த பின்பே ஆதரவு.. விஷால் பேட்டி!
சென்னை: நடிகர் விஜய் மக்களுக்கு செய்வதற்காக அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலின் போது விஜய் அளிக்கும் தேர்தல் வாக்குறுதியை பார்த்த பின் தான் அவருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள விஷால், அதற்கு ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் வலம் வருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை தொடங்கினால், கட்சிப் பணிகளை நிதானமாகவே செய்து வந்தார்.

அந்த வகையில் அக்டோபர் மாதம் இறுதியில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அங்கு நடிகர் விஜய் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன்பின் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியாக திமுகவை எதிர்த்து கேள்வி எழுப்பி கொண்டே வருகிறார்.
சில நாட்களுக்கு முன் பரந்தூர் சென்ற விஜய், புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடி வந்த விவசாயிகளையும், மக்களையும் சந்தித்தார். அப்போது திமுகவினரை நாடகமாடுவதில் கில்லாடிகள் என்று விஜய் வைத்த விமர்சனம், திமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களை கொந்தளிக்க வைத்தது. இதனால் விஜய்-க்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கடுமையாக பதில் அளித்தனர்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு முழுவதும் இருந்து தவெக தலைமை நிலையமான பனையூரில் நிர்வாகிகள் கூடி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருடனும் விஜய் தனியாக ஆலோசனை நடத்தி மாவட்டச் செயலாளர்களை நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் குடியரசு தினமான இன்று நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ் சினிமாவில் இருந்து அரசியலில் அடி எடுத்து வைத்துள்ள விஜய்-க்கு உங்களின் ஆதரவு இருக்குமா என்ற கேள்விக்கு, அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் நடக்கவுள்ளது. விஜய் அளிக்க உள்ள தேர்தல் வாக்குறுதியை பார்க்க வேண்டும்.
உதாரணமாக கல்லூரியில் சேர்கிறோம் என்றால், அந்த கல்லூரியில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று சொல்வார்கள். அதுபோல் விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்று தெரிய வேண்டும். நான் விஜய் ரசிகனாக இருந்தாலும், அவர் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
கிராமங்களில் தண்ணீர் பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது. அதனால் விஜய்-க்கு ஆதரவு தெரிவிக்க இன்னும் காலம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அரசியல் கட்சி தொடங்கிய சில வாரங்களிலேயே, நடிகர் விஷாலும் நிச்சயம் 2026ல் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications