“புலி வருது புலி வருதுனு பூச்சாண்டி காட்டாதீங்க.. நான் தான் முதல் ஆளா நிற்பேன்".. எடப்பாடி அட்டாக்!
சென்னை: "தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும். "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்த நிலையில், அவரது பதிவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், ஆதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பதில்
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அன்னைக்கு காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது ஸ்டாலினின் இந்த ட்வீட். தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்.
கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை. இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதை வைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் Goal Post மாற்றும் அரசியலை அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.
ரவுடியிசம், திருட்டு
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் நடக்கும் இந்த திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப்படுகிறார்கள்.
மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியிசத்தையும், திருட்டுக்களையும், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் ட்வீட்
முன்னதாக ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், எடப்பாடி பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணை போகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications