'கல்விக்காக தொடர்ந்து உதவி செய்வேன்'.. பிரதமர் மோடி பாராட்டிய இளநீர் வியாபாரி தாயம்மாள் உறுதி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் எனும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் உரையாற்றி வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் நமது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாளை வெகுவாக பாராட்டினார். இது தொடர்பாக பிரதமர் பேசுகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

தாயம்மாளை பாராட்டிய பிரதமர்
வறுமையில் வாடும் நிலையிலும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடை அளித்தார். இதை செய்ய அவருக்கு மிகப் பெரிய மனம் வேண்டும்' என்று பிரதமர் பேசினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 8-ம் வகுப்பு வரை 650 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கல்விக்கு ரூ.1 லட்சம் நிதி
இதனால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் எழுப்ப நிதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாள் தனது சொந்த சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் கல்விக்காக நிதி வழங்கிய தாயம்மாள் மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் (எ) அய்யாவு ஆகியோரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கல்வியின் முக்கியத்துவம் தெரியும்
இளநீர் விற்று சிறுகச் சிறுக சேர்த்த தொகையை பள்ளி கட்டிடம் கட்ட வழங்கியது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால்தான் பிரதமர் மோடி அவரை புகழ்ந்து பேசினார். பிரதமர் பாராட்டி பேசியதால் தாயம்மாள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பெரிய அளவில் கல்வி பயிலாததால் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எனக்கு தெரிந்தது. எனது கணவரும் 7ஆம் வகுப்பு வரை மட்டும் பயின்றுள்ளார்.

முடிந்த உதவிகளை செய்வேன்
இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். கல்வி அனைவருக்கும் கிடைக்க என்னால் முடிந்த ஒரு உதவியாக ரூ. 1 லட்சத்தை அரசு பள்ளிக்கு வழங்கினேன். இதுகுறித்து, பாரத பிரதமர் பாராட்டியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன் என்று கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகனும் தாயம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications