சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்க இது அவசியம்.. தமிழக அரசு போட்ட உத்தரவு.. உரிமம் பெறுவது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் சைக்கிள், இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்து வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் இடியாப்பம் சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இளைஞர்கள் பலரும் இடியாப்பத்தை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பாக இடியாப்பக்காரர் சைக்கிளில் நிற்காமல் செல்வதை வைத்து ஒரு மீம் கூட டிரெண்டாகியது. இந்த நிலையில் இடியாப்பம் ஒரு சில இடங்களில் தரம் குறைந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் உணவுப் பாதுகாப்புத்துறை தரப்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் உரிமம் பெற வேண்டியது அவசியம். இதற்கான லைசன்ஸை ஆன்லைன் மூலமாகவே பெற முடியும். இந்த லைசன்ஸை ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்புத்துறையிடம் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தலின்படி இடியாப்பம் தயாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இடியாப்பம் தயாரிக்கும் போது கைகளில் உரை, தலையில் கவனம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இடியாப்பத்தை பாதுகாப்பாகவும், சுதாதாரமான, தரமான பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் காய்ச்சல், நோய் தொற்று பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications