கபாலீசுவரர் கோயில் மயில் சிலை மாற்றம்.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைப்பு
சென்னை: சென்னை கபாலீசுவரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் உருவ சிலை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடராமன் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தர மோகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயில் உள்ளது. 2004 கும்பாபிஷேகத்தின்போது புன்னைவனநாதர் சன்னதியில் மயில் வடிவ அம்பாள் கற்சிலை மாற்றம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

அரசாணை வெளியீடு
இந்நிலையில் தான் சிலை மாற்றம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமை வகிக்கிறார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உண்மை அறியும் விசாரணை குழு
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் 2004ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது அருள்மிகு புன்னைவனநாதர் சன்னதியில் மயில் வடிவத்தில் உள்ள அம்பாள் கற்சிலை மாற்றப்பட்டது. இதுதொடர்பாக ரங்கராஜன் நசிம்மன், வி சேகர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஆகியவற்றில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடராமன் தலைமையில் உண்மை அறியும் விசாரணை குழு அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கவனமாக பரிசீலனை
எனவே நீதியரசர் தலைமையில் உண்மை அறியும் விசரணை குழு ஒன்றினை அமைக்குமாறும், அவ்விசாரணை குழுவிற்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கடராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்குமாறும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அரசை கேட்டுக் கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது.

நியமனம்
இந்த பரிசீலனைக்கு பின்னர் அதனை ஏற்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் உருவில் உள்ள அம்பாள் கற்சிலை மாற்றப்பட்டது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் விசாரணை குழுவினை அமைத்தும், அவ்விசாரணை குழுவிற்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கடராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்திட இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications