குடும்ப தலைவர்களை கண்டு கொள்ளாத கழகங்கள்.. ஆண்களை கவர 'வாரம் லிட்டர் ப்ரீ'.. வாக்கு குவியுமே!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களை கவர குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் என்று தி.மு.க-வும், 1500 ரூபாய் என்று அ.தி.மு.க-வும் அறிவித்துள்ளார்கள். ஆனால் இருவருமே குடும்ப தலைவர்களை கண்டு கொள்ளவே இல்லை.
ஆண்களை கவர வாரம் இரண்டு லிட்டர் பெட்ரோலை இலவசமாக அளித்தால் போதும், செலவு என்னவோ மாதம் ஒரு ஆணுக்கு 800 ரூபாய் அளவுக்கு தான் வரும். வரியை கழித்து பார்த்தால் 400 ரூபாய்க்கும் கீழ்தான் வரும்.
இதை செய்தால் வாக்குகள் தானாக குவியும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பை பல குடும்ப தலைவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுப்புவதை பார்க்க முடிகிறது.
திமுக அதிரடி
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபற உள்ளது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களை கவரவும், மாணவர்களை கவரவும், விவசாயிகளை கவரமும் இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் உள்ள திமுக இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டங்களை அறிவித்து வருகிறது.
கடன் தள்ளுபடி
அந்த கட்சி அறிவித்த திட்டங்களில் முக்கியமானது, கூட்டுறவு வங்கியின் விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி ஆகியவை ஆகும். இதில் கூட்டுறவு வங்கியின் விவசாய கடன் தள்ளுபடி, மற்றும் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துவிட்டார்.
1000 திமுக
இந்நிலையில் அடுத்த திருப்பமாக மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு மறுநாளே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், தாங்கள் அறிவிக்கவிருந்த இந்தத் திட்டம் வெளியே கசிந்தது எனவும், அதை ஸ்டாலின் காப்பியடித்து முன்னரே அறிவித்துவிட்டார் எனவும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
யார் மீது சுமை ஏறும்
தமிழக அரசியல் கட்சியினர் எல்லோருமே குடும்ப தலைவிகளை மையப்படுத்தி வாக்கு சேகரிக்க கவர்ச்சி அறிவிப்பு வெளியிடுகிறார்கள். இவை எல்லாம் சாத்தியமாக அதற்கு நிதி ஆதாரம் எவ்வளவு தேவை, ஏற்கனவே 5 லட்சம் கோடி கடன் உள்ள தமிழகம் இனி எப்படி சமாளிக்கும், ஒவ்வொரு தமிழனின் தலையில் எவ்வளவு சுமை இனி ஏறும் என்பதை பற்றி எல்லாம் யாரும் கவலைபப்டுவதாக தெரியவில்லை. வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி அறிவிப்புகளை தாறுமாறாக வெளியிடுகிறார்கள் என்பது தான் கவலை தரும் தகவல்.
வாய் திறக்கவில்லை
ஏனெனில் பெட்ரோல் விலைக்கான வரிகள் குறைக்கப்படவில்லை. சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. சுங்ககட்டணத்தில் விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றை செய்வதாக எந்த கட்சியும் வாக்குறுதி கொடுக்கவில்லை. இதேபோல் திமுக, அதிமுக இரண்டுமே தப்பித்தவறி கூட மதுவிலக்கை பற்றி பேசுவார்களா என்றால் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து அமைதி காக்கிறார்கள்.
வாரம் 2 லிட்டர் இலவசம்
இதுஒருபுறம் எனில் குடும்ப தலைவர்களை குறிவைத்து இதுவரை ஒரு அறிவிப்பு கூட இருகழகங்களும் வெளியிடவில்லை என்பதே உண்மை இதை சமூக வலைதளங்களில் ஆதங்கமாக பல ஆண்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. ஆண்களை கவர வாரம் இரண்டு லிட்டர் பெட்ரோலை இலவசமாக அளித்தால் போதும், செலவு என்னவோ மாதம் ஒரு ஆணுக்கு 800 ரூபாய் அளவுக்கு தான் வரும். வரியை கழித்து பார்த்தால் 400 ரூபாய்க்கும் கீழ்தான் வரும். இதை செய்தால் வாக்குகள் தானாக குவியும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பை பல குடுமப தலைவர்கள் சமூக வலைதளங்களில் எழுப்புவதை பார்க்க முடிகிறது.