ரெண்டுல ஒண்ணை தொடணும்.. ஓபிஎஸ்-ஐ ரவுண்டு கட்டிய எடப்பாடி.. தீர்ப்பு ‘அப்படி’ வந்தால் என்ன நடக்கும்?
சென்னை : நீதிமன்ற உத்தரவு இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக வரவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும்.
அப்படி நடந்தால், அந்த பொதுக்குழுவில் பங்கேற்று, ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தால் பெரும் அமளியில் ஓ.பி.எஸ் தரப்பினர் ஈடுபடலாம் எனக் கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்த பேச்சுகள் எழுந்தால் வெளிப்படையாக கட்சி விதிகளுக்கு மாறாக பொதுக்குழு நடைபெறுவதாக அறிவித்துவிட்டு வெளிநடப்பு செய்யலாம் என்றும் அதன்பிறகு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒற்றைத் தலைமை
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவுக்குள் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை மறுநாள் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இரட்டைத் தலைமையைக் கலைத்துவிட்டு, சிறப்பு தீர்மானத்தின் மூலம் ஒற்றைத் தலைமையை கொண்டுவர அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்து வருகிறார்.

ஓ.பி.எஸ் எதிர்ப்பு
ஒற்றைத் தலைமையை கொண்டு வந்தால், கட்சியில் பிளவு ஏற்பட்டு, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தற்போது நிலவக்கூடிய அசாதாரண சூழ்நிலையில் பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும் அதில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்தில்
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. கட்சி விதிகளை திருத்த தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கும் இன்று பிற்பகலில் விசாரிக்கப்படுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் ஓ.பி.எஸ்ஸுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் காவல்துறை அனுமதி கொடுக்கக்கூடாது என்று ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் மனு அளித்தார். ஆனால், தனியார் மண்டபத்தில் நடப்பதால் அனுமதி மறுக்க முடியாது என காவல்துறை மறுத்துள்ளது. அதேநேரம், அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், பாரபட்சமின்றி அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
பொதுக்குழுவை ரத்து செய்ய கடைசி ஆயுதமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றும், பொதுக்குழு கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை பொறுத்தே தேர்தல் ஆணையத்திற்கு செல்வது குறித்து முடிவு செய்வோம் என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

வேறு வாய்ப்புகள்?
இதனால், நீதிமன்றத்தில் இன்று பொதுக்குழு நடத்த தடை விதிக்கப்படவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதாகத்தான் அர்த்தம். நீதிமன்ற உத்தரவு ஓ.பி.எஸ்ஸுக்கு சாதகமாக வரவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு கூட்டம் நடக்கும். அப்படி நடந்தால், அந்த பொதுக்குழுவில் பங்கேற்று, ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தால் பெரும் அமளியில் ஓ.பி.எஸ் தரப்பினர் ஈடுபடலாம் எனக் கூறப்படுகிறது.

வெளிநடப்பு
அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் பங்கேற்று மற்ற தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு, ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்த பேச்சுகள் எழுந்தால் வெளிப்படையாக கட்சி விதிகளுக்கு மாறாக பொதுக்குழு நடைபெறுவதாக அறிவித்துவிட்டு வெளிநடப்பு செய்யலாம் என்றும் அதன்பிறகு நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடலாம் என்றும் கூறப்படுகிறது.

புறக்கணிப்பு
அல்லது பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புறக்கணித்து, ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எல்லாமே இன்று நீதிமன்றம் பிறப்பிக்கப் போகும் உத்தரவில் தான் இருக்கிறது.. பார்க்கலாம்..!












Click it and Unblock the Notifications