விவசாயியாக சொல்றேன்! திமுக மீண்டும் வந்தால்.. தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. எடப்பாடி
தஞ்சை: தப்பித்தவறி மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றும், இதை நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசவில்லை, முன்னாள் முதலமைச்சராக பேசவில்லை. சாதாரண விவசாயி என்ற முறையில் பேசுவதாக தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சர்வதேச நதிநீர் பங்கீடு கொள்கையின்படி நதியின் கீழ்ப் பகுதியில் இருக்கும் மாநிலங்களுக்கே நதிநீரின் பங்கீட்டில் அதிக உரிமை உள்ளது. 222 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் செல்லும் பாலாற்று நீரை, வெறும் 33 கிலோமீட்டர்களுக்கு பாலாறு நீர்வழியைக் கொண்டிருக்கும் ஆந்திர மாநிலம் ஏற்கனவே 22 தடுப்பணைகள் கொண்டு தடுத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது.

இதனை உரிமையோடு நின்று குரல் கொடுத்து தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்த விடியா திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோத ஆட்சியாக செயல்பட்டு வரும் திமுகவை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தஞ்சையில் இன்று அதிமுக போராட்டம் நடத்தியது.
திமுக ஆட்சிக்கு வந்தால்: இந்த போராட்டத்தில், தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தப்பித்தவறி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "மீண்டும் தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. இதை நான் அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து பேசவில்லை, எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசவில்லை, முன்னாள் முதலமைச்சராக பேசவில்லை. சாதாரண விவசாயி என்ற முறையில் என் மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
சிறுபாண்மை மக்களை அரண் போல்: விடியா திமுக ஆட்சியிலே விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. விவசாய தொழிலாளிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று சொன்னால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். உங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். சிறுபாண்மை மக்களை அரண் போல் இந்த அதிமுக மக்கள் காக்கும். எந்த சூழ்நிலையிலும் உங்களுக்காக நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications