"இருமொழி கொள்கை" ஆங்கிலத்தை வளர்த்தால் தமிழ் அழியாதா? தமிழிசை செளந்தரராஜன் கேட்ட கேள்வி!
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்விக்கான நிதியை தமிழ்நாட்டிற்கு விடுவிப்போம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்பான விவாதம் தொடங்கியது. பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தரப்பில் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்தும் அரசியல் கட்சியினர் யார் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் தமிழக அரசு தரப்பில், இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தார்.

இருந்தாலும் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், அதிகமாக தமிழ் பரீட்சை எழுதாத மாணவர்களின் பட்டியல் கடந்த முறை வெளி வந்தது.
அதேபோல் தேர்வு எழுதாத மாணவர்கள், தமிழ் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இன்னும் தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலும் தமிழ் கட்டாயமாக்கப்படவில்லை. இப்படியொரு சூழலை வைத்து கொண்டு நான் கேட்கிறேன்.. தமிழ், தமிழ் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் அல்லவா..
எவ்வளவு தமிழ் இலக்கியங்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் அக்கறை செலுத்தினார்கள்? தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ன நிலையில் உள்ளது என்பதையும் கேட்கிறேன்? தமிழ்நாட்டிலேயே தமிழை வளர்க்காமல் இருமொழி கொள்கை என்று ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள். அதனை பெருமையாக பேசுகிறார்கள். ஆங்கிலத்தை வளர்ப்போம் என்று பெருமையாக சொல்கிறார்கள்.
ஆங்கிலத்தை வளர்த்தால் தமிழ் அழியாதா? அதேபோல் ப.சிதம்பரம் வட மாநிலங்களில் ஒருமொழி கொள்கைதானே இருக்கிறது என்கிறார். வட மாநிலங்களில் ஐபிஎஸ், ஐஏஎஸ்-கள் உருவாகவில்லையா? ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டம் என்ன? திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? பட்டியலை வெளியிடுங்கள் பார்க்கலாம்.
ஆனால் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுத்துள்ளோம் என்று விவரமாக கூறி சென்றுள்ளார். காங்கிரஸ் இருக்கும் போதுதான் நீட் தேர்வு ஆரம்பமானது. திமுக - காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக தோல்வியடைந்த கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications