எளிமையாக இருந்தார்! "கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்.." ரஜினிகாந்த் பேச்சு
சென்னை: சென்னை கிண்டியில் நடந்து வரும் 'கலைஞர் 100' விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் "கலைஞர் மிகவும் எளிமையானவர் என்றும், கலைஞர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய சிவாஜி, எம்ஜிஆர்கள் உருவாகியிருப்பார்கள்" என்றும் பேசினார்
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதன்படி முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழகத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னையில் பெருமழை பெய்தது. இதனால், கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டு சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. இதனால் கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 6 ஆம் தேதி கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்த விழா நடைபெறும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, அதற்கான பணிகள் நடந்தது. இந்த நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் திட்டமிட்டபடி மாலை 5 மணி அளவில் 'கலைஞர் 100' நிகழ்வு தொடங்கியது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார்.
அதே போல நடிகர் கமல்ஹாசன், நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல் நடிகைகள், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கலைஞர் மிகவும் எளிமையானவர் என்றும், கலைஞர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய சிவாஜி, எம்ஜிஆர்கள் உருவாகியிருப்பார்கள் என்று பேசினார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:- கலைஞர் குறித்து பேச தொடங்கினால், எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்றே தெரியாது. நடிகர் சிவாஜி கணேசனை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர் கலைஞர் கருணாநிதி.
இதேபோல் நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை தொடர் வெற்றி படங்கள் கொடுத்து பெரிய வெற்றி பெற வைத்தவர் கலைஞர் கருணாநிதி. இந்த படங்களில் வாங்கிய பணத்தை வைத்து தான் கோபாலபுரத்தில் கடந்த 1955-ஆம் ஆண்டு கருணாநிதி வீடு வாங்கினார். மிகவும் எளிமையாக வாழ்ந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் கருணாநிதி. கருணாநிதி மட்டும் அரசியலுக்கு போகாமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய சிவாஜி, எம்ஜிஆர்கள் உருவாகியிருப்பார்கள். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications