திருமணமான பின்.. பிறந்த வீட்டுடன் பெண்ணுக்கு தொடர்பு உண்டா? இல்லையா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: திருமணமான பின் கணவர் வீட்டில் வசிப்பதாலும், பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படுவதாலும், ஒரு பெண் பிறந்த வீட்டுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார் என கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிராம பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு, அந்த கிராமத்தில் அருந்ததியர் தெருவை சேர்ந்த ஜி.மாயக்கண்ணன், பி.சரண்யா ஆகியோர் விண்ணப்பம் செய்தனர்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், சரண்யாவை கிராம பஞ்சாயத்து செயலாளராக நியமித்து 2019ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பிறகு திருமணம் முடித்த சரண்யா கணவருடன் நெய்வேலியில் வசித்தார். இதனை காரணம் காட்டி அவரை கிராம பஞ்சாயத்து செயலாளராக நியமித்த உத்தரவை ரத்து செய்து, தன்னை செயலாளராக நியமிக்க உத்தரவிடக் கோரி மாயக்கண்ணன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, சரண்யா அளித்த சான்றிதழ்களுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், அந்த ஆவணங்கள் போலியானவையோ அல்ல என அரசு கருதுவதாக சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் பஞ்சாயத்து செயலாளர் என்பவர் அவசர பணிக்காக உடனடியாக வருவதை உறுதி செய்வதற்காகவும், உள்ளூர் நிலவரங்கள், தேவைகள், பிரச்சனைகளை தெரிந்திருப்பார் என்பதால் தான் உள்ளூரை சேர்ந்தவர் என குடியிருப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டுமென நிர்பந்திக்கப்படுவதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நீதிபதி தனது உத்தரவில், மணமான பெண் கணவர் வீட்டில் வசிப்பதுதான் வழக்கம் என்பதாலும், கணவர் குடும்பத்தின் குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெண்ணின் பெயர் நீக்கப்படுகிறது என்பதாலும், அதன்பின்னர் பிறந்த வீட்டுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார் என கூற முடியாது என தெளிவுபடுத்தி உள்ளார்.
இன்றைய உலகில், கல்வி வேலைக்காக ஆணும், பெண்ணும் பல்வேறு ஊர்களுக்கு சென்றாலும், தாங்கள் பிறந்த பூர்வீக இடத்தையே நிரந்திர இருப்பிடமாக கருதுகின்றனர் என்றும், பூர்வீக இடத்துக்கு திரும்புவது என்பது மணமான பெண்ணின் விருப்பத்திற்கு உட்பட்டது தான் என்றும் நீதிபதி மஞ்சுளா தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications