இது நடந்தால் நிச்சயம் மீண்டும் முழு லாக்டவுன்தான்.. வேற வழியே இல்லை... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 345 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை.
அமைச்சர் பாண்டியராஜன்
மாஸ்க்குகளை கூட அணியாமல், அதிகப்படியான மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதால் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டால் மீண்டும் முழுவ ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மீண்டும் ஆவடியில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன்,அதிமுக தேர்தல் பணிமனையை நேற்று திறந்து வைத்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளைக் கடந்த 10 ஆண்டுகளில் ஏன் நிறைவேற்றவில்லை என்று பொதுமக்கள் கேட்பது சரியானது என்றும் ஆனால் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா இரண்டாவது அலை
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்றும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதால் தமிழகம் வெகு கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேவைப்பட்டால் ஊரடங்கு
மேலும், விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. நமக்குத் தேர்தல் முக்கியம், பரப்புரை முக்கியம், ஆனால், அவை எல்லாவற்றையும்விட உயிர் முக்கியம். முதல்வர் எப்பாடி பழனிசாமி தற்போது தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதிகாரிகள் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கொரோனா பரவல் இரண்டாம் அலை தமிழ்நாட்டில் மீண்டும் ஏற்படும்பட்சத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.