எழுச்சி ஏற்பட்டால்தான் அரசியலுக்கு வருவேன்.. ரஜினிகாந்த் ஒரே போடு
சென்னை நட்சத்திர ஹோட்டலில் நிருபர்களிடம் இன்று பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: நான் முதல்வர் கிடையாது, கட்சி தலைவர்தான் என்று கூறிய கொள்கைகளை மக்கள் மன்ற நிர்வாகிகளில் பலர் ஒப்புக்கொள்ளவில்லை.
Recommended Video
கட்சியை பதிவு செய்து பெரிய மாநாடு நடத்தி, அங்கே கொடியை அறிமுகம் செய்து, கட்சி பெயரை சொல்லி, கொள்கைகளை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. எதிர்ப்பது யாரை? 2 பெரிய ஜாம்பவான்கள். அசுர பலத்தோடு உள்ளார்கள். ஒரு பக்கம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. மிகப்பெரிய ஆளுமை தலைவர் இல்லை. அவரின் வாரிசு என்பதை நிரூபிக்கும் நிர்பந்தம். வாழ்வா, சாவா என்ற நிர்பந்தம். எந்த யுக்தியையும் செய்வார்கள். அவர்களை சந்திக்கனும்.

பலிகடா ஆவார்கள்
ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு, குபேரனுடைய கஜானாவை கையில் வைத்துக் கொண்டு இன்னொரு தரப்பு காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில், சினிமா புகழை மட்டும் வைத்துக் கொண்டு நான் ஜெயிக்க முடியுமா? இந்த கொள்கைகள் எடுபடாவிட்டால், என்னை நம்பி வருவோரை பலிகடா ஆக்க மாட்டேன். தேர்தல் சாதாரண விஷயமா? மனைவி தாலியை விற்று, அரசியலுக்கு வருவார்களே, இந்த வயதில் எனக்கு அது தேவையா. எனவே முதலில் கொள்கையை சொல்லிவிடலாம் என்றுதான் சொன்னேன்.

ஆளுமைகள்
தமிழகத்தில், பெரிய வெற்றிடம் இருக்கு. 2 பெரிய ஆளுமைகள் இப்போது அரசியலில் இல்லை. திமுகவுக்கு 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் போட்டனர். அதிமுகவிலும் அப்படித்தான். 70 சதவீதம் ஓட்டு, ஜெயலலிதாவுக்காகத்தான் போட்டனர். 30 சதவீதம்தான் கட்சிக்காக போட்டனர். இதுதான் வெற்றிடம். 54 ஆண்டுகளாக நீடிக்கும் ஆட்சியை அகற்ற இதுதான் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதனால் ஒரு மூவ்மென்ட் (Movement) உருவாகனும். ஒரு எழுச்சி உருவாகனும். அப்படி உருவானால், பண பலம், ஜாம்பவான்கள், சூழ்ச்சி எதுவும் நிக்காது. தூள் தூளாகும்.

எழுச்சி தேவை
அப்படியான ஒரு அலை, மூவ்மென்ட் உண்டாகனும். எழுச்சி உண்டாகனும். அது உண்டாகும் என நம்புகிறேன். இந்த பூமி புரட்சிகளுக்கு பெயர் பெற்ற பூமி. காந்தி இந்த மண்ணில்தான், தனது உடையை தூக்கிப் போட்டு, இரண்டே உடை அணிந்தார். விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து வந்து 100 இளைஞர்களை கொடுங்க, நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்று, கர்ஜித்த பூமி. காங்கிரஸை தேசம் முழுக்க ஆண்டபோதும், 1967ல் மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது தமிழகத்தில்தான். வருங்கால சந்ததி நல்லா இருக்க, அதேபோன்ற புரட்சி தமிழகத்தில் மீண்டும் நடக்கனும். அதிசயம், அற்புதம் மக்கள் நிகழ்த்தனும்.

வயசாச்சிங்க
படிச்ச பத்திரிக்கையாளர்கள் எடுத்துச் சொல்லனும். அறிவுஜீவிகள் எடுத்துச் சொல்லனும். தமிழ் மக்களுக்காக அரசியல் புரட்சி வெடிக்கனும். இது நடக்கலைன்னு வைங்களேன். 15 சதவீதம், 20 சதவீதம் ஓட்டை பிரிக்க நான் அரசியலுக்கு வரனுமா? தேவை கிடையாது. இப்போ விட்டா பிறகு பிடிக்கலாம் என்கிற வயசு எனக்கு இல்லை. பிழைச்சு வந்துள்ளேன். 2026ல் எனக்கு 76 வயதாகும். இப்போது ஏற்காதவர்களா, அப்போது எனது சித்தாந்தத்தை ஏற்பார்கள்?

எழுச்சி வந்தா வருகிறேன்
எனவே ரசிகர்கள் மூலை முடுக்கெல்லாம் மக்களிடம் இதைப் போய் சொல்லுங்கள். நான் அரசியலுக்கு வரனும்னா அதை செய்யுங்கள். அந்த எழுச்சி எனக்கு தெரியட்டும். அப்போ வர்றேன் நான். இந்த புரட்சி இந்தியா முழுக்க பரவனும். அரசியல் மாற்றம், இப்போ இல்லைன்னா, எப்போதும் இல்லை. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். இதன் மூலம், புரட்சி நடக்காவிட்டால் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications