சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக நான்காக உடையலாம்.. ப சிதம்பரம் கணிப்பு
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா வருகிற 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக, அவரது வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த ப சிதம்பரம், சசிகலா விடுதலையானால் அதிமுக நான்காக கூட உடையலாம் என்றார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உறுதி செய்தது,. இதையடுத்து அவர்கள் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்த கேட்ட கேள்விக்கு, அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் பதில் அளித்தது.

ஹைகோர்டில் வழக்கு
சசிகலா மற்றும் இளவரசி, திவாகரன் ஆகிய 3 பேரும் தங்களுக்கான அபராதத்தை செலுத்திவிட்டார்கள். எனவே மூவரும் விடுதலை செய்யப்படுவதாக உறுதியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த 1994-95 ஆம் ஆண்டு சசிகலா தாக்கல் செய்த வரிக் கணக்கு தாக்கலில் 4 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்தை குறைத்து காட்டியிருந்ததாக, வருமான வரித்துறை கூறியிருந்தது. இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்த நிலையில், வருமான வரித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சசிகலா விடுதலை
இந்த வழக்கு விசாரணையின் போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்ரமணி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதால் அவரிடம் விளக்கங்கள் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அமமுக
சசிகலா விடுதலையாவது குறித்து வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளால், அவர் வருகைக்கு பின் அதிமுகவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சசிகலா விடுதலையாகி வெளியே வருவதால் அமமுக, அதிமுக மீண்டும் இணையலாம் என்று ஒரு சாரர் கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் அதிமுகவில் இப்போது உள்ள சசிகலா பக்கம் தாவ வாய்ப்பு உள்ளதாக கூறி வருகிறார்கள்.

நான்காக உடையும்
இந்நிலையில், சசிகலா விடுதலை குறித்து நேற்று பேசிய ப.சிதம்பரம், "சசிகலா வெளியில் வந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உயிர்த்தெழும் என பேசப்பட்டு வருகிறது. அதிமுக, அம்மா திராவிடம், பெரியவர், சின்னவர் திராவிடம் என நான்காக உடைய வாய்ப்பிருக்கிறது" என கூறினார்.












Click it and Unblock the Notifications