மகளிர் உரிமை தொகை.. ரேஷன் கார்டு நம்பர் சொன்னால் போதும்.. இ சேவை மையத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எதற்காக நிராகரிக்கப்பட்டது என்று தெரியாமல் பலரும் தவித்து வந்த நிலையில் இசேவை மையங்களில் சென்று விசாரித்தால் உண்மை தெரிய வருகிறது. உங்கள் குடும்ப அட்டை எண்ணை இ சேவை மையத்தில், அடுத்த நொடி ஏன் உங்களுக்கு உரிமை தொகை வரவில்லை என்பதை சொல்லிவிடுகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1.06 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அன்றே அனைவரது வங்கி கணக்கிற்கும் செப்டம்பர் மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

அதேநேரம் 1000 ரூபாய் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில் சுமார் 57 லட்சம் பேருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தங்களது விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியாமல் தவித்து வந்தவர்களுக்கு இசேவை மையங்களில் தெளிவான தீர்வு கிடைக்கிறது என்று கூறினார்கள்.
இதனால் இசேவை மையங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய, ஒரு இசேவை மையத்திற்கு நேரடியாக சென்று பார்த்தோம். அங்கு ஏராளமான பெண்களும், ஆண்களும் காத்துக்கிடந்தனர். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, குடும்ப அட்டை எண்ணை கேட்டு, நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவர் தனக்கு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது என்றும், ஆனால் பணம் வரவில்லை என்றும் கூறினார். அவரது குடும்ப எண்ணை கூறும்படி இசேவை மைய அதிகாரிகள் கேட்டனர். அவரும் கூறினார். இறுதியில், அவர் கடந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர் என்பதும், அதனால் தான் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.அந்த எஸ்எம்எஸ் குறித்து பார்த்த போது, அவரது தாயாரது ஆதார் எண், அவரது செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் தனி குடும்பம் என்பதால் அவரது அம்மாவிற்கு கிடைத்துள்ளது. அதனால் அவருக்கு கிடைக்காத தகவல் தெரியாமல் இருந்திருக்கிறது.
இதேபோல் ஒரு பெண் வந்து, தாங்கள் ஏழை குடும்பம் என்றும் ஆனால் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக வேதனையுடன் கூறினார். சரி, உங்கள் குடும்ப எண்ணை கூறுங்கள் என்று அதிகாரிகள் கூறினர். அவரும் கூறினார். அப்போது அவரது கணவர் பெயரில் கார் இருப்பது தெரிய வந்தது. அதனால் தான் உங்கள் மனு நிராகரிக்கப்பட்டது என்றார்கள். அதற்கு அந்த பெண், இப்போது அந்த கார் பயன்பாட்டில் இல்லை. என் கணவர் இறந்துவிட்டார். காரையும் விற்க போகிறோம், பெரிய வருமானம் என்பது வீட்டில் இல்லை என்றார். அதனை பொறுமையாக கேட்ட அதிகாரிகள், அப்படி என்றால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுங்கள். கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அவர்களிடம் பேசி புரிய வைத்தனர்.
இன்னொரு பெண் தனக்கு எப்படி விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று ஆவேசத்துடன் கேட்டார். அவரது குடும்ப எண்ணை வாங்கி பார்த்த போது, அவரது மகன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் தான் நிராகரிக்கப்பட்டது என்பதை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
மீண்டும் கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் : இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரவர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்திருந்தாலோ, யாராவது ஒருவருக்கு நான்கு சக்கர வாகனங்கள் அல்லது பெரிய வாகனங்கள் இருந்தாலோ இதில் தெரிந்துவிடும். எனவே அதிக வருமானம் உடையவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்கள். அதேநேரம் தவறுதலாக இருப்பதாக யாராவது கருதினால் மீண்டும் கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications