என் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை
ஐஐடி வளாக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: "என் மகளின் செல்போனை ஆன் செய்தவுடன் வந்த வாசகம் இதுதான்.. என் மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பத்மநாபன்.. எனது சாம்சங் நோட்டைப் பார்த்தால் தெரியும்.. எனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை தேவை".. 19 வயது மகளை பரிதாபமாக பறி கொடுத்த அப்துல் லத்தீப் கதறி அழுகிறார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். நல்ல அறிவுடைய பெண்.. படிப்பில் சுட்டியாக விளங்கியவர். பிளஸ்டூவில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றவர். சென்னை ஐஐடியில் படித்து வந்தார். அங்கும் அவர்தான் படிப்பில் நம்பர் ஒன். திடீரென ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார் பாத்திமா.
கேரள மாநிலமே அதிர்ந்தும், கொதித்தும் போயுள்ளது இந்த சம்பவத்தால். இந்த நிலையில் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது...

செல்போன்
"எனது மகளின் செல்போனில் தனது மரணத்திற்கான காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். போலீஸாரின் கோரிக்கையைத் தொடர்ந்து எனது இளைய மகள் ஆயிஷா, பாத்திமாவின் செல்போனை ஓபன் செய்துள்ளார். அப்போது, எனது மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பத்மநாபன். எனது சாம்சங் நோட்டைப் பார்த்தால் தெரியும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார் பாத்திமா.

ஆதாரம்
ஐஐடி அதிகாரிகள் இந்த செல்போன் ஆதாரத்தை அழித்து விடுவார்கள் என அஞ்சுகிறேன். இந்த ஆதாரம்தான் குற்றவாளிக்கு எதிராக உள்ளது. எனவே போலீஸார் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்" என்று கதறியபடி கூறினார் அப்துல் லத்தீப்.

மெசேஜ்
பாத்திமாவின் தங்கை ஆயிஷா கூறுகையில், "காவல் நிலையத்திற்கு நாங்கள் போனபோது எனது சகோதரியின் செல்போன் அங்கு இருந்தது. அதை யாருமே கண்டு கொள்ளவே இல்லை. நான் போய் திறந்து பார்த்தபோதுதான் இந்த மெசேஜ் வந்தது. போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்" என்றார்.

கொடுமை
அப்துல் லத்தீப் மேலும் கூறுகையில், " ரோஹித் வெமுலா கதையேதான் இதுவும். எனது மகளை கடந்த 28 நாட்களாக ஐஐடி நிர்வாகம் கொடுமைப்படுத்தியுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. சுதர்சன் பத்மநாபன் மட்டுமல்லாமல் வேறு சில ஆசிரியர்கள் மீதும் எனது மகள் குற்றம் சாட்டியுள்ளார். என்ன மாதிரியான துன்பத்தை எனது மகள் சந்தித்தாள் என்பது தெரியவில்லை. ஆனால் மன ரீதியாக சித்திரவதையை அனுபவித்துள்ளாள். இதை நான் கடைசி வரை விடப் போவதில்லை என்றார்.

சாட்சியங்கள்
இதற்கிடையே, இதுதொடர்பான விசாரணையை கோட்டூர்புரம் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். 11 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டஉள்ளது. அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் நிலையம் கூறுகிறது.சந்தேகப்படும் அனைவரையும் விசாரிப்போம் என்றும் போலீஸார் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications