ட்விஸ்ட்! பாஜகவுக்கு வரிசையாக ஆதரவு தரும் கட்சிகள்! நேற்று புதிய நீதிக்கட்சி.. இன்று ஐஜேகே ஆதரவு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கடந்த முறை இங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் காங்கிரஸே அங்குக் களமிறங்குகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
அதிமுக தரப்பு
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் ஜன. 31ஆம் தொடங்கும் நிலையில், மற்ற கட்சிகள் வேட்பாளர் தேர்வைத் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்னும் கூட அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவார் என்பதில் தெளிவான முடிவு கிடைக்கவில்லை.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரு தரப்பும் இந்தத் தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். அதிமுக இப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரு தரப்பாகப் பிரிந்து உள்ளது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரு தரப்புமே போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இருவருமே வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருவதாகவும் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அறிவித்துள்ளனர்.
பாஜக
மேலும், கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்தும் இரு தரப்பும் தங்கள் ஆதரவைக் கேட்டு வருகின்றனர். இதில் முதலில் எடப்பாடி தரப்பில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து இருந்தனர். அதைத் தொடர்ந்து ஓபிஸும் கூட அண்ணாமலையைச் சந்தித்தார். தான் வேட்பாளரைக் களமிறக்க உள்ளதாக அறிவித்த ஓபிஎஸ், அதேநேரம் கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளரை அறிவித்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்லியிருந்தார்.. இந்த விவகாரத்தில் பாஜக இன்னும் ஓரிரு நாட்களில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
ஐஜேகே
இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் தமிழக பாரதிய ஜனதா சிறப்பாக இயங்குகிறது என ஐஜேகே கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே புதிய நீதிக் கட்சியும் பாஜக நிலைப்பாட்டிற்கே ஆதரவு அளிப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.