நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை! ஆனால் உங்களுக்காக.. பிகு பண்ணும் பாரிவேந்தர்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் விருப்பமில்லை என்றும் ஆனாலும் ஐ.ஜே.கே. தொண்டர்களுக்காக தேர்தல் மீண்டும் நிற்க முடிவெடுத்துள்ளதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சி தலைவருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் 84வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில், பாரிவேந்தருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய பாரிவேந்தர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தனக்கு 100க்கு 100 % விருப்பமே இல்லை என்றும் இருப்பினும் இந்திய ஜனநாயக கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளுக்காகவும், தொண்டர்களுக்காகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் கூறினார்.
அதுமட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வதோடு வரும் சட்டசபைத் தேர்தலிலும் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்று ஐஜேகே சார்பில் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பவுள்ளதாக கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். எந்தக் கூட்டணியில் ஐஜேகேவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வார்கள் எனத் தெரியவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் கொரோனா பரவல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தொகுதி பக்கம் தலைக்காட்டவே இல்லை. இந்தச் சூழலில் வரும் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் களமிறங்க காய் நகர்த்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications