பொள்ளாச்சி சம்பவம் போல இன்னொன்று நடந்து விடக் கூடாது.. இளையராஜா ஆதங்கம்
பொள்ளாச்சி சம்பவத்துக்கு இசைஞானி இளையராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: "பொள்ளாச்சி சம்பவம்போல இன்னொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது" என்று இசையமைப்பாளர் இளையராஜா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக இளையராஜா கல்லூரி நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். மாணவ-மாணவிகளிடம் இசையின் வல்லமை பற்றியும், தான் கடந்து வந்த பாதை குறித்தும், எடுத்துரைத்து வருகிறார்.
குறிப்பாக நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று கட்டாயம் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கலந்துரையாடல்
அதில் இளையராஜா கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது. விழாவில் பேசியபோது தனது இசை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மலரும் நினைவுகள்
தான் இன்னும் கூட இசையை கற்றுக் கொண்டிருப்பாக தெரிவித்த இளையராஜா மாணவிகளிடம் பாடல் உருவான கதைகள் குறித்தும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பொள்ளாச்சி சம்பவம்
நிகழ்ச்சி முடிவில், இளையராஜாவிடம் செய்தியாளர்கள் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு இளையராஜா, "தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கோ, அதோடதான் நானும் இருக்கேன். தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்றாங்க? தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்றாங்க?" என்று இளையராஜா செய்தியாளர்களிடம் திரும்ப கேட்டார்.

மக்கள் உணர்வு
அதற்கு செய்தியாளர், "இன்னொரு முறை இப்படி ஒரு சம்பவம் எதுவும் நடந்துடக்கூடாதுன்னு மக்கள் சொல்றாங்க" என்று பதிலளிக்கிறார். "ஆங்.. இதேதான் என் உணர்வும். இந்த விஷயத்தில் தமிழக மக்களுடன் நானும் உள்ளேன்" என்று பதிலளித்தார் இளையராஜா!












Click it and Unblock the Notifications