"எத்தனை பங்களா இருக்கு?” குறுக்கு விசாரணையில் சாட்சிக் கூண்டில் ஏறி இளையராஜா சொன்ன பதில்!
சென்னை: தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று நேரில் ஆஜர் ஆகி ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.
தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களை யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா இன்று ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில் 1997ஆம் ஆண்டு இளையராஜா அவரது மனைவி பெயரில் இசை நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த ஒப்பந்தத்தின்படி தேவர்மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை தனது நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தங்கள் அனுமதி இல்லாமல் அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் எனவே தங்களின் அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் எதிர் மனு தாரர்களாக இளையராஜாவின் இசை நிறுவனம் மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அப்துல் குத்தூஸ் முன் நடைபெற்றது. ஒப்பந்தம் மேற்கொண்ட போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றி குறிப்பிடவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இளையராஜா தற்போது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். எந்தெந்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்கை தாங்கள் எதிர் தரப்பாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்து அது தொடர்பான சாட்சியத்தை அளித்துள்ளார் இளையராஜா.
இளையராஜாவிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அதற்கு சாட்சி கூண்டில் ஏறி இளையராஜா பதிலளித்தார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாகவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன.
குறுக்கு விசாரணையின் போது எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு இளையராஜா, எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகலாவிய பொருட்களை பற்றி எனக்குத் தெரியாது என பதில் அளித்துள்ளார்.
மேலும், பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா என்ற கேள்விக்கு, அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது தான் என அவர் பதிலளித்தார்.
இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நீதிபதி, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications