தேவதை போன்ற பெண்.. பவதாரிணிக்கு பிடித்த இளையராஜா பாட்டு.. கண்ணீரில் நனையும் முகநூல் பதிவுகள்
சென்னை: இளையராஜாவின் பல பாட்டுகள் அவரது ரசிகர்களை மயங்க வைக்கும்.. சில பாட்டுக்கள் ரசிக்க வைக்கும். இளையராஜாவின் மகள் பவதாரிணிக்கு பிடித்த பாடல் எது என்று கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார் அவரிடம் முன்பு பேட்டி எடுத்த செய்தியாளர் ஒருவர்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவினால் வியாழக்கிழமை இரவு காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். பவதாரிணியின் உடல் இறுதி அஞ்சலிக்குப் பிறகு தேனியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

பவதாரிணியின் மறைவுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். செய்தியாளராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய Raja Thirumagan SU Senthilkumaran தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உதவி மற்றும் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றுகையில் இசைஞானி இளையராஜா செய்யும் பாடல் பதிவுகள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பின் போது எல்லோருமே இறுக்கமாக இருப்பார்கள்.எனில் என் போன்ற உதவி மற்றும் அசோசியேட் இயக்குனர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் ஒருவர் உள்ளே நுழையும் போது சூழல் மிக எளிமையும் இயல்புமாய் ஆகும்.
காரணம் இளையராஜா சிரிப்பார். மகிழ்வார். சகஜமாகப் பேசுவார். அவர்தான் பவதாரிணி. அது மட்டுமல்ல ஒர் ஓரமாக நிற்கும் என் போன்ற உதவி மற்றும் அசோசியேட் இயக்குனர்கள் அருகிலும் வந்து பேசுவார். நலம் விசாரிப்பார்.
அப்படிப்பட்ட சூழல்களில் அவர் என்னிடம் பேசும்போது நான் அவரை ஒரு தேவதை போலவே உணர்ந்திருக்கிறேன். ( அந்த சூழலில் இருந்தோருக்குதான் நான் தேவதை என்று சொல்வதன் நியாயம் புரியும் ) இன்று இக உலக வாழ்வு நீத்து நிஜமாகவே தேவதை ஆகி விட்டார். அவர் குரலே கண்ணீரோடு என் காதுகளில் ஒலிப்பது போல ஒரு பிரம்மை. அஞ்சலி பவதாரிணி என்று பதிவிட்டுள்ளார்.
பவதாரிணியின் உடல் வெள்ளிக்கிழமை மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர். பலப்பல ஆண்டுகளுக்கு பிறகு , மீண்டும் இசைஞானி இளையராஜா வீட்டில் நிற்கிறேன், அந்த குயில் குரலின் உடலுக்கு கடைசி அஞ்சலி செலுத்த. அப்போதுதான் நானே மறந்து போன இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

சென்னை வந்த புதிதில் விகடன் நிருபராக இருந்த போது, பிடிச்ச பாட்டு என்ற தலைப்பில் ஒரு பேட்டித் தொடர் எடுத்தேன்
பிரபல இசை அமைப்பாளர்கள் , கவிஞர்கள் பாடகர்களின் வாரிசுகளை சந்தித்து உங்கள் அப்பா (அல்லது அம்மா)வின் பாடல்களில் பிடித்த பாடல் எது என்பதுதான் கேள்வி
இளையராஜாவின் வீட்டுக்கு போன் செய்து அனுமதி பெற்று,, ஒரு மாலை வேளையில் சென்னை முருகேசன் தெருவுக்குள் இருக்கும் அந்த இசை வீட்டுக்குள் முதல் முதலாக நுழைகிறேன் . இளையராஜா வீட்டில் இல்லை. ஒரு பெண்மணி வந்து ஹாலில் உட்கார வைத்து இதோ வந்துடுவாங்க என்றார் சில நொடிகளின் முதலில் வந்தார் பவதாரிணி .
அப்போதைய அனுபவக் குறைவு காரணமாக நேரடியாகக் கேட்டேன் . " சொல்லுங்க .. உங்க அப்பா பாடல்களிலேயே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு எது?'' புன்னகையும் குழந்தைமையும் கலந்த முகம் மற்றும் குரலோடு உடனே திருப்பிக் கேட்டார் . "உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?''
நான் சொன்னேன் . "ஒரு பாட்டு மட்டும்னா என்னால சொல்ல முடியல . "முடிப்பதற்குள் கேட்டார் . " உங்களாலேயே சொல்ல முடியல. அவரு எங்க அப்பா . நான் எப்படி சொல்ல முடியும்? '' அசடு வழிந்தபடி வேறு ஏதோ பேசிக் கொண்டு இருந்து விட்டு சட்டென்று கேட்டேன், " இப்போ உடனே தோணும் பாட்டு எது? யோசிக்காம சொல்லுங்க " என்றேன்
யோசிக்காமல் சொன்னார் " ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா .. மைனா.... " ஆனந்தக்கும்மி படப் பாட்டு அப்புறம் கார்த்திக்கும் யுவனும் வந்து அமர்ந்து தங்களுக்குப் பிடித்த பாடல்களையும் சொன்னார்கள் ("மெல்ல மெல்ல என்னைத் தொட்டு - கார்த்திக் ராஜா . "காதலின் தீபம் ஒன்று ''- யுவன் )
அன்று எந்த ஹாலின் வலது புறத்தில் நாங்கள் உட்கார்ந்து பேசினோமோ (உட்புறம் வடிவம் மாறி இருப்பது போலவும் எனக்கு இப்போது தோன்றுகிறது. தவறாகவும் இருக்கலாம்) அதற்கு இடது புறம் அதே ஹாலின் இடது புறத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் பவதாரிணியின் உடல் கண்டபோது கலங்கி உடைந்தேன். வீடு வந்து விட்டேன் . இன்னும் விடுபட முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications