இளையராஜா சொன்னத கவனிச்சீங்களா.. “என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது” - இலங்கையில் பெருமிதம்
சென்னை: என்னுடைய இசை இல்லாவிட்டால் உங்களால் இருக்கவே முடியாது என இசையமைப்பாளர் இளையராஜா இலங்கையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி மற்றும் ஜனவரி 28 ஆம் தேதி 'இளையராஜா லைவ் இன் கான்செர்ட்' என்ற பெயரில் இசை கச்சேரி நடைபெற உள்ளது. இந்தியாவை போலவே இலங்கையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இளையராஜாவுக்கு உள்ளனர். அவரின் இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இளையராஜா, பிரபல பாடகர்கள், இசைக் கலைஞர்கள் அடங்கிய தன்னுடைய இசைக் குழுவினருடன் நேற்று மாலை 5 மணியளவில் இலங்கைக்கு வந்தடைந்தார்.

முன்னணி பாடகர் மனோ, எஸ்.பி.சரண், பாடகி மது பாலகிருஷ்ணன், பாடகி ஸ்வேதா மோகன், பாடகி அனிதா கார்த்திகேயன், பாடகி பிரியா ஹிமேஷ், பாடகி விபாவரி, பாடகி சுர்முகி ராமன் உள்ளிட்டோர் இளையராஜாவின் இசைக் கச்சேரியில் கலந்துகொண்டு பாட உள்ளார்கள். கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றடைந்த இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
இலங்கையின் பாரம்பரிய உடையணிந்து பாரம்பரிய இசை மேள சத்தங்கள் முழங்கிய பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது விமான நிலையத்துக்கு வந்த இலங்கை செய்தியாளர்களை சந்தித்து இசை நிகழ்ச்சி தொடர்பாக அவர் பேசினார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இசையோடுதான் நான் இங்கு வந்து உள்ளேன். இலங்கையில் நீங்கள் எங்கு போனாலும், நான் எங்கு சென்றாலும் என்னுடைய இசை இன்றி உங்களால் இருக்கவே முடியாது.
இலங்கை தமிழர்களில் யாராவது எனக்கு ரசிகராக இல்லாமல் இருக்கிறீர்களா? எனக்கு அனைவரும் ரசிகர்கள் தானே. நீங்கள் அனைவரும் துன்பங்களையும், துயரங்களையும் தாண்டி வந்தவர்கள் தானே. என்னுடைய இசை உங்களை ஆறுதல் அடைய வைக்கிறது என்றாலே எனக்கு அது போதும். இதுதான் எனக்கு பெரிய சந்தோசம். கடவுள் எனக்கு அளித்த வரம் இது." என்றார்.












Click it and Unblock the Notifications