மழை வரப்போகுதே.. அதுவும் இந்த நான்கு மாவட்டங்களில் வெளுக்கப்போகுதாம்.. வானிலை மையம் சூப்பர் தகவல்
சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக 14, 15ம் தேதிகளில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரையின் சில பகுதிகள், தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதியில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையினை இப்போது பார்ப்போம்.
மிதமான மழை
குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 11.4.2021 , 12.4.2021 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
வடக்கு உள் மாவட்டங்கள்
13.4. 2021 தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
தேனி நீலகிரி கோவை
14.4.2021, 15 4 2021 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் நீலகிரி தேனி கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
தமிழகத்தில் மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு என்ன என்பதை இப்போது பார்ப்போம். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய ஊர்களில் தலா ஐந்து சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நான்கு சென்டிமீட்டர் மழையும், கயத்தாறு , நாகர்கோயில் , சாத்தான்குளம் , மதுரை ஆகிய பகுதிகளில் தலா மூன்று சென்டிமீட்டர் மாழையும், பெருஞ்சாணி புத்தன் அணை , கன்னிமார் , வழி நோக்கம் , பாம்பன், ஆர்எஸ் மங்கலம் ஆகிய ஊர்களில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை " இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது