Exclusive: வட இந்திய தொழிலாளர்கள் கிளம்பினால், தமிழ்நாட்டின் ஹோட்டல் தொழிலே முடங்கும்- வசந்தபவன் ரவி
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள்.
சென்னை: வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ரயில் ஏறி வரும் நிலையில் ஹோட்டல் தொழிலே முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளதாக கூறுகிறார் சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவரும், வசந்த பவன் ஹோட்டல் அதிபருமான ரவி.
வட மாநிலத் தொழிலாளர்கள் இல்லாவிட்டால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி ஒன் இந்தியா தமிழிடம் வசந்த பவன் ரவி பட்டியலிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு;

பாதிக்கு பாதி
''தமிழ்நாட்டில் ஹோட்டல், கட்டுமானம், உள்ளிட்ட எந்த துறைகளை எடுத்துக் கொண்டாலும் பாதிக்கு பாதி பேர் வட மாநிலத் தொழிலாளர்கள் தான் பணியாற்றுகின்றனர். காரணம் நம்மாளுங்க பிரஸ்டீஜ் காரணமாக வெளிநாட்டில் போய் எந்த வேலையை வேண்டுமானாலும் பார்ப்போம் தமிழ்நாட்டில் பார்க்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தமிழர்களுக்கு படிப்பறிவு அதிகம் என்பதால் அவரவர் திறமைக்கு ஏற்ப செட்டிலாகிவிடுகிறார்கள். இதில் தவறேதும் இல்லை.''

பிரஸ்டீஜ் பிராப்ளம்
''இதனால் இங்குள்ள தொழில்துறைக்கு ஆட் பற்றாகுறை ஏற்படுகிறது. அப்புறம் வட மாநிலத் தொழிலாளர்கள் வராமல் என்ன செய்வார்கள். அவர்கள் தான் ஓரளவு தொழில்துறையை தாங்கிப் பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஒரு பொய்யான வீடியோ வலம் வந்ததை பார்த்துவிட்டு எனது ஹோட்டலில் வேலை செய்பவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊருக்கு புறப்பட்டு வரும் படி பதறுகின்றனர்.''

வசந்த பவன்
''நேற்றுக் கூட எனது ஹோட்டலில் இருந்து 10 தொழிலாளர்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். என்னிடம் உள்ள பணியாளர்களில் 55% பேர் வட மாநிலத் தொழிலாளர்கள் தான். பாத்திரம் கழுவுவது, காய்கறி வெட்டுவது, முதல் நான் ரொட்டி போடுவது வரை வட மாநிலத்தவர்கள் தான் கவனித்துக் கொண்டனர். இப்போது ஒரே நாளில் எல்லோரும் ஊருக்கு புறப்படுகின்றனர். நாங்கள் இதற்காக டிரெய்னிங் கொடுத்து பணிக்கு அமர்த்தினால் ஒரு பொய்யான வீடியோவால் இன்று எல்லோரும் சிதறி ஓடும் நிலை உள்ளது.''

ஹோட்டல் சங்கத் தலைவர்
''பீகார் போன்ற வட மாநிலங்களில் ஊடகங்கள் மூலம் இது வதந்தி, பொய்யான தகவல் தமிழ்நாட்டில் இப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை என்பதை தமிழக அரசும், காவல்துறையும் எடுத்துக் கூற வேண்டும்'' என்ற கோரிக்கையை விடுத்தார் சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவரும், வசந்த பவன் ஹோட்டல் அதிபருமான ரவி.

அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ்.
இதனிடையே தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ்.ஸை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. நம்மை பற்றிய விவரத்தை சேகரித்த அவர் பி.ஆர்.ஓ. விளக்கம் அளிப்பார் எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். ஆனால் அது போன்று யாரும் நம்மிடம் பேசவில்லை.












Click it and Unblock the Notifications