பயணிகள் கவனத்திற்கு.. 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை பாதியளவு ரத்து.. எந்தெந்த ரூட்?
சென்னை: ரயில் பயணிகளின் கவனத்துக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ரயில்களின் சேவை பாதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடப்பதால் பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்களின் சேவை பாதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் (வண்டி எண்- 16844) பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் 10, 13 ஆம் தேதிகளில் கரூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மேலும் பணிகள் முடிந்த பிறகு அந்த ரயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் ரயில் (வண்டி எண்-16811) எக்ஸ்பிரஸ் 10, 13 ஆகிய தேதிகளில் வீரராக்கியம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியத்தில் இருந்து சேலம் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16812) 10, 13 ஆகிய தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும். அந்த ரயில் சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை இயக்கப்படும். எனவே, ரயில் சேவைகளின் பாதிப்புக்கு பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications