சென்னை மெட்ரோ ரயிலில் ஏறும்போது இப்படி செஞ்சா "ஜெயில்" தான்.. இந்த முக்கியமான ரூல் தெரியுமா?
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கியமான சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. கட்டண சலுகை, விழாக் கால சலுகை, கூடுதல் நேரம் நீட்டிப்பு, எளிதாக டிக்கெட் எடுக்கும் வசதி, அதிக முறை பயணிப்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சிறப்பு சலுகைகள் காரணமாக, நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வதற்கு ஏராளமானோர் மெட்ரோ ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஜனவரி மாதத்தில் மட்டும் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
'மாஸ்டர்' விஜய் போல: பீக் ஹவர் நேரங்களில் பயணிகளின் வசதிக்காக 3 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், பயணிகள் சிலர் மெட்ரோ ரயில்களில் விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்திருந்தது.
'மாஸ்டர்' திரைப்படத்தில் மெட்ரோ ரயிலை நிறுத்த நடிகர் விஜய், பாட்டில் ஒன்றை மூடப்பட்டுக் கொண்டிருக்கும் கதவுக்கு இடையே வீசுவார். அதுபோல, பயணிகள், கதவு மூடப்படும் நேரத்தில் கதவுகளுக்கு இடையே பேக், வாட்டர் பாட்டில் போன்றவற்றை வைப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

ஜெயில் தண்டனை: அதன்படி, கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக கதவுகள் மூடப்பட்டவுடன் கதவுகளை திறக்க பயணிகள் முயற்சிப்பது, தானியங்கி கதவுகள் மூடும் போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை திறக்க முயற்சிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுவதால் அலுவல் நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுகிறது.
இது போன்ற செயல்களில் ஈடுவோருக்கு மெட்ரோ ரயில் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு சட்டம் 2002 பிரிவு 67ன் படி 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதற்காக பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications