2021-ல் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி...? அதிமுகவிடம் உறுதியை எதிர்பார்க்கும் பாமக
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், இப்போதே கூட்டணியை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர வேண்டும் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது விருப்பமாக உள்ளது.
இதன் காரணமாக தான் பாமக 32-வது ஆண்டுவிழாவை ஒட்டி அக்கட்சியின் நிறுவன ராமதாஸை தொலைபேசி மூலம் அழைத்து இருவரும் வாழ்த்துக்கூட தெரிவித்தார்கள்.
அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட்... தள்ளிப்போகும் அறிவிப்பு... ஏமாற்றத்தில் நிர்வாகிகள்
வட மாவட்டங்கள்
வட தமிழகத்தை பொறுத்தவரை பட்டாளி மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்குவங்கியும், சமூகம் சார்ந்த செல்வாக்கும் மிகுதியாக உள்ளது. அரியலூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வரை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பாமகவின் அடித்தளமும், கட்சியின் உட்கட்டமைப்பும் வலுவாக உள்ளதால் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் போட்டியாகவே திகழ்கிறது. இதனால் கூட்டணியில் பாமக இருந்தால் நல்லது என அந்த இரண்டு கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளும் எண்ணுகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல்
திமுக, அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வந்த பாமக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாட்டை மாற்றி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக கூட்டணியில் இணைந்தது. அப்போது எழுந்த கடும் விமர்சனங்களை எல்லாம் சாதுர்யமாக சமாளித்து கடந்து வந்தது பாமக. இதனிடையே அதிமுக கூட்டணியில் இருந்தாலும், இட ஒதுக்கீடு, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராக சமரசமின்றி அறிக்கைகள் விடுத்து வருகிறார் ராமதாஸ்.
அதிமுக அச்சம்
இதனிடையே கொரோனாவுக்கு முன்னர் தம்பிகள் படை, தங்கைகள் படை எனத் தொடங்கிய அன்புமணி, வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என பேசி வந்தார். இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதோ என சலசலப்புகள் ஏற்பட்டன. பின்னர், சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியில் பிற கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றா பேச முடியும் என அதற்கு விளக்கங்கள் கூட தரப்பட்டன.
2021 சட்டமன்ற தேர்தல்
இந்நிலையில் பாமகவின் 32-வது ஆண்டுவிழாவை ஒட்டி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை தொலைபேசி மூலம் அழைத்து இ.பி.எஸ். மற்றும் ஓ.பி,எஸ். பேசியது அதிமுக கூட்டணியில் பாமக தொடரவேண்டும் என்பதற்கான சமிஞ்கையாகவே கருதப்படுகிறது. இதனிடையே வெறுமனே சீட் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் அதிமுக கூட்டணியில் தொடர விருப்பமில்லாத பாமக, 2021-ல் துணை முதல்வர் பதவியை கோரிக்கையாக வைத்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.