வந்து பார்க்கட்டும்.. அப்போதான்.. விஜய் அரசியல் எண்ட்ரி பற்றிய கேள்விக்கு ஜெயக்குமார் நறுக் பதில்
சென்னை: தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று தனது மக்கள் இயக்கத்திற்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்பது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயின் அரசியல் பிரவேசம் எப்போது என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். விஜயின் செயல்பாடுகளும் அவரது அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்து வருகிறது. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரசிகர்களை வைத்து செய்து வருகிறார்.

அதேபோல பண மதிப்பிழப்பு விவகாரம் உள்பட தனது பல்வேறு விவகாரங்களிலும் விஜய் நேரடியாக குரல் கொடுத்துள்ளார். கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்காக நேரடியாக குரல் கொடுக்காவிட்டாலும் வெற்றி பெற்ற பின்னர் தனது இயக்க நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டினார்.
படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து விஜய் ஆலோசனையும் நடத்தினார். இந்நிலையில் தான் அம்பேத்கர் பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கம் விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் எழுதினார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் விஜயின் இந்த திடீர் அறிவிப்பு... தனது அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க.. விரைவில் மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்குள் பெரிய திட்டத்துடன் விஜய் களம் இறங்கலாம் என்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயின் செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்திலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் , தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று தனது மக்கள் இயக்கத்திற்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது அரசியலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் பார்வை என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "வரட்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் சொல்ல முடியுமா? அதனால் என்ன.. ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வெல்கம்.. சும்மா வந்து நானும் குதிக்கிறேன்.. குதிக்கிறேன் என்று குதிக்கக் கூடாது. வந்து பார்க்கட்டும்.. எவ்ளோ கஷ்டம்.. நஷ்டம் இருக்கு என்று" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications