சென்னை கல்லூரியில் படித்தபடி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! பீகார் மாணவரை தட்டித்தூக்கிய போலீசார்
சென்னை: சென்னை காட்டாங்களத்தூரில் இன்ஜினீயரீங் படிக்கும் பீகாரை சேர்ந்த 20 வயது மாணவர் கஞ்சா கடத்தி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்தார். இதையடுத்து பீகார் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதைபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் பிற மாநில எல்லையோர மாவட்டங்களில் போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
இருப்பினும் ஆங்காங்கே சில நபர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே தான் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்கும் வகையில் ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கஞ்சா பதுக்கியவர்கள், விற்றவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். சென்னையில் இதுவரை சுமார் 1,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை அழிக்க, சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா, ஹெராயின் ஆகியவற்றை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் சென்னை காட்டாங்களத்தூரில் புகழ்பெற்ற கல்லூரியொன்றில் பீகாரை சேர்ந்த யஷ் சஷ்வத் (வயது 20) என்பவர் இன்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த காவல்துறை ஆய்வாளர் சரவணன் மார்த்தாண்டன் தலைமையிலான போலீசார் மாணவரை அதிரடியாக கைது செய்தனர். இவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா, அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரருகிறது.