ஷூ போட்டுவிட வந்த உதவியாளர்! கடிந்துகொண்ட டி.ஆர்.பாலு! திமுக பொதுக்குழு மேடையில் பரபரப்பு!
சென்னை: திமுக பொதுக்குழு மேடையில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு அவரது உதவியாளர் ஷூ போட்டுவிட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சுதாரித்துக் கொண்ட டி.ஆர்.பாலு, தனது உதவியாளரிடம் கடிந்துகொண்டதுடன் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
டி.ஆர்.பாலு மட்டும் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்திருந்தால், இந்நேரம் இந்த விவகாரம் விஸ்வரூபமாகி சர்ச்சையில் சிக்கியிருப்பார்.

திமுக பொதுக்குழு
திமுக பொருளாளராக போட்டியின்றி டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுக்குழுவில் ஆற்காடு வீரசாமி அறிவித்தவுடன் விறுவிறுவென மேடைக்கு ஏறினார் டி.ஆர்.பாலு. ஸ்டாலின், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது தாம் அணிந்திருந்த வெள்ளை நிற ஷூவை கழற்றிவிட்டு அஞ்சலி செலுத்தினார் டி.ஆர்.பாலு.

டி.ஆர்.பாலு ஷூ
இதனிடையே மீண்டும் ஷுவை அணியாமல் மறந்தவாறு தனது இருக்கைக்கு வந்து அமர்ந்துவிட்டார் டி.ஆர்.பாலு. இதையடுத்து அவரது உதவியாளர் அந்த காலணியை தனது கையால் எடுத்து வந்து டி.ஆர்.பாலுவிடம் கொடுத்ததுடன் அதை கீழே குணிந்து மாட்டிவிடவும் முயன்றார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதறிப்போனார். ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட டி.ஆர்.பாலு, தனது உதவியாளரை கடிந்துபேசி அனுப்பி வைத்துவிட்டு தாமே தனது ஷூவை போட்டுக் கொண்டார்.

சர்ச்சைகள் தவிர்ப்பு
டி.ஆர்.பாலு மட்டும் இதில் கவனக் குறைவாக இருந்திருந்தால் இந்நேரம் இந்த விவகாரம் வில்லங்கமாகி தேவையற்ற சர்ச்சைகளில் அவர் சிக்கியிருப்பார். 4,000 பேர் அமர்ந்திருப்பது கூட தெரியாமல் அதுவும் அருகில் முதல்வர் ஸ்டாலினை வைத்துக் கொண்டே டி.ஆர்.பாலுவின் உதவியாளர் செய்யவிருந்த காரியம் கட்சிக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கும். ஆனால் சமயோஜிதமாக செயல்பட்டு சர்ச்சைகளை தவிர்த்துவிட்டார் டி.ஆர்.பாலு.

துரைமுருகன்
இதனிடையே திமுக தலைவராக ஸ்டாலின் பெயரை ஆற்காடு வீராசாமி அறிவித்ததும் ஒட்டுமொத்த பொதுக்குழுவும் எழுந்து நின்று ஆரவாரம் செய்த நிலையில், துரைமுருகன் மட்டும் எழுந்து நிற்கவில்லை. ஸ்டாலினே வாலண்ட்ரியாக சென்று கை கொடுத்த பிறகு தான் துரைமுருகன் எழுந்து வாழ்த்து தெரிவித்தார். துரைமுருகனின் இந்த நடவடிக்கை அங்கிருந்த அமைச்சர்களையே முகம் சுளிக்க வைத்தது.












Click it and Unblock the Notifications