தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை? இதோ ஷாக் ரிப்போர்ட்
Recommended Video
சென்னை: என்னப்பா.. விலைவாசி எல்லாம் ஏறி போச்சு! இப்ப வந்து இந்த பிஸ்கோத்து காசை கொடுக்கிறீங்களே.. என்ற அங்கலாய்ப்புகள் தமிழகத்தின் பல தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாயில் இருந்து எதிரொலித்துக் கொண்டுள்ளன.
காரணம்.. இந்த லோக்சபா தேர்தலில், ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் அளவு 300 என்ற அளவில் குறைந்து போனதுதானாம்.
பெரம்பலூர், மதுரை, அரக்கோணம், தூத்துக்குடி தொகுதிகளில் ஓட்டுக்கு 300 ரூபாய் என்று ரேட் ஃபிக்ஸ் செய்துள்ளதாம் அந்த மூன்றெழுத்து முக்கிய கட்சி.
பணம் குறைவு
"நான்கு எழுத்து கட்சி, தேனி மாதிரி தொகுதிகளில் ஓட்டுக்கு, ஆயிரம் ரூபாய் அள்ளி வீசி உள்ளது.. நீங்கள் என்னடா என்றால், உங்கள் பழைய தலைவரைப் போல, கையிலிருந்து பணத்தை எடுக்க மாட்டேன் என்கிறீர்களே.." என்று, மூன்று எழுத்து கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் திருவாளர் பொது ஜனங்கள்.
சமாதானங்கள்
"என்னப்பா பண்ணுவது.. ஆட்சியில் இருப்பவர்கள் எளிதாக கொண்டு சென்று கொடுக்க முடிகிறது.. நமக்கு ஆயிரத்தெட்டு கெடுபிடி.." என்று சமாதானம் சொல்கிறார்கள் மூன்றெழுத்து கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள்.
சமத்துவம் இல்லையேப்பா
அதற்குள் அந்த பக்கம் ஒரு களேபரம். சோளிங்கர் தொகுதியில் ஓட்டுக்கு, 2000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்று ஒரு தகவல் பரவிவிட, "என்னப்பா.. பக்கதது அரக்கோணத்துல, 300 ரூபாய், சோளிங்கரில் 2000 ரூபாயா.. இதிலும் சமத்துவம் கிடையாதா.. சின்சியாரிட்டிக்கும், சீனியாரிட்டிக்கும் என்னப்பா மரியாதை" என்று அங்கலாய்த்துக் கொள்ளும் வாக்காளர்களையும் பார்க்க முடிகிறது.
தொழில் ரகசியம்
இன்று இரவு மற்றும் நாளை இரவுக்குள், பிற தொகுதி ரேட் நிலவரமும் தெரியவந்துவிடத்தான் போகிறது. அது 1000 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, 300 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, ஆனால் ஒருவருக்கு ஒருவர் கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில்லை என்பதில் தான் அடங்கியுள்ளது, அந்த அரசியல் கட்சிகளின் இத்தனை ஆண்டுகால 'தொழில் ரகசியம்'.