10% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஜெ., கொள்கையை பின்பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.. ஓபிஎஸ்
சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் கூறியுள்ளார்,
நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்க, சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொத்தம் 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், பாஜக, பாமக, தேமுதிக, முஸ்லீம் லீக், புதிய தமிழகம், தமாக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்றன.
இதில் உயர்வகுப்பை சேர்ந்த ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கூடாது என, திமுக உட்பட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வராமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்பதாக நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்தன.
அதே போல பாஜக, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றகழகம் உள்ளிட்ட கட்சிகள் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு முழு ஆதரவு தெரிவித்தன. ஆனால் அதே சமயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சீமானும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கூட்டத்தில் அனைத்து கட்சிகளாலும் நல்ல பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், சட்ட நிபுணர்களின் ஆலோசனையுடன் நல்லதொரு முடிவு விரைவில் எட்டப்படும். சமூக நீதியை காக்க ஜெயலலிதாவின் கொள்கைப்படி சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications