துக்ளக் ரமேஷ் இல்ல திருமண விழா... ஓ.பி.எஸ் -குருமூர்த்தி சந்திப்பு தவிர்ப்பு
சென்னை: துக்ளக் இதழின் மூத்த செய்தியாசிரியர் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ஆடிட்டர் குருமூர்த்தியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதை தவிர்த்துக்கொண்டனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சென்ற பின்னர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து சென்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஓ.பி.எஸ்.ஸை சசிகலாவுக்கு எதிராக திருப்பியது தொடர்பாக குருமூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
திருமண வரவேற்பு
துக்ளக் இதழை சோ நடத்தத் தொடங்கியது முதல் அந்த இதழில் செய்தியாசிரியராக இருப்பவர் ரமேஷ். கடந்த கால் நூற்றாண்டை ஒட்டி ஒரே பத்திரிகையில் அவர் இருப்பதால் துக்ளக் ரமேஷ் என பெயர் வந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் பரிச்சயமானவர் இவர்.இவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடந்தது.
அமைச்சர்கள் வாழ்த்து
துக்ளக் ரமேஷ் இல்ல விழாவுக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி விட்டு சட்டென்று அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். அவர்களுடன் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த போயஸ் கார்டன் பூங்குன்றனும் கலந்துகொண்டார்.
சந்திப்பு தவிர்ப்பு
திருமண வரவேற்பு நிகழ்வில் குருமூர்த்தியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதை தவிர்த்துவிட்டனர். ஓ.பி.எஸ். அண்ட் கோ வந்து சென்ற பின்பே குருமூர்த்தி அந்த நிகழ்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது. குருமூர்த்தி வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் அந்த அரங்கை விட்டு வெளியேறிவிட்டனர்.
நத்தம் விஸ்வநாதன்
கடந்த 2011-2016 ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவில் பவர்ஃபுல் அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.ஸோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கியிருக்கிறார். இதனிடையே நேற்றைய தினம் பூங்குன்றனிடம் ஓ.பி.எஸ். சில விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.