விடாது பெய்யும் மழை.. தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம்..சென்னை மழைக்கு முதல் உயிர் பலி
சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் ஸ்லாப் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது.
அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை அமைந்திருக்கும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீரை வெளியேற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.

மாநகராட்சி தகவல்
மழை வெள்ள நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார். சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக இதுவரை 154 புகார்கள் பெறப்பட்டதில் 21 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. 133 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 25 இடங்களில் மரம் விழுந்துள்ளது; 17 இடங்களில் மரம் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 இடங்களில் அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

சுரங்கப்பாதையில் வடிந்த வெள்ளம்
15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறியது. வழக்கமாக மழைநீர் தேங்கும் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெளியேறியது என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மணி நேரத்திற்கு கனமழை
இதனிடையே சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், கரூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.5ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

முதல் உயிர் பலி
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் சாந்தி, என்ற பெண் உயிரிழந்துள்ளர். அடிக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது அருகில் உள்ள கட்டடத்தின் பால்கனி இடிந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications