Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள்.. 6000 நிவாரணம் பெற பதில் அளிக்க வேண்டிய 11 கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துவோர் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி பெற ஞாயிறு முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. அவர்கள் 11 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதில் சந்தேகம் இருந்தால் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்துவார்கள். இதுபற்றி பார்ப்போம்.

வங்க கடலில் உருவான மிக்ஜம்' புயல் ஆந்திராவில் கடந்த டிசம்பர் 5-ந்தேதி கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4, ஆகிய தேதிகளில் மிக அதிகனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 47 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி இரவு தொடங்கி டிசம்பர் 5ம் தேதி காலை வரை விடாமல் 36 மணி நேரம் மழை கொட்டியது.

Income Tax Payers, Govt Servants 11 Questions to Answer to Get Rs 6000 Relief in Chennai

இந்த புயல் காரணமாக கொட்டித்தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. அதேநேரம் சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் 4 மாவட்ட மக்களும் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார்கள். வெள்ளப்பாதிப்பால் பலர் உடமைகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள மக்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி சென்னையில் மாவட்டம் முழுவதுமாகவும், மற்ற 3 மாவட்டங்களில் மழை பாதித்த தாலுகாக்களில் மட்டும் ரூ.6 ஆயிரம் நாளை முதல் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வினியோகம் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம ஆகிய 4 மாவட்டங்களில் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் அரசு அறிவித்த ரூ.6 ஆயிரம் பணத்தை ரேஷன் கடைகளில் போய் பெற முடியாது. ஆனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தால், பாதிக்கப்பட்டதற்கான முழு விவரங்களை ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தங்கள் வங்கி கணக்கு எண்ணையும் தர வேண்டும். அதிகாரிகள் விசாரித்து ரூ.6 ஆயிரம் நிவாரண தொகையை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் செலுத்த உள்ளார்கள்

அதன்படி, டோக்கன் வழங்கப்படாத அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பம் வாங்கி, அதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில், 11 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.

அதாவது, 1.உங்கள் வார்டு எண் - மண்டலம் - உங்கள் தெரு பெயர், 2. குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி பெயர், 3. உங்கள்து செல்போன் எண், 4. ஆதார் எண், 5. வீட்டு முகவரி, 6. குடும்ப அட்டை எண் (இருப்பின்), 7. வங்கி கணக்கு விவரம், 8. பாதிக்கப்பட்ட வீட்டின் வகை (குடிசை, நிரந்தர வீடு, அடுக்குமாடி குடியிருப்பு), 9. பாதிப்பின் விவரம் (பகுதியாக பாதிக்கப்பட்டதா அல்லது முழுவதுமாக பாதிக்கப்பட்டதா?), 10. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து துணிமணிகள், பாத்திரங்கள் பாதிக்கப்பட்டதா? (ஆம் அல்லது இல்லை), 11. தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதா? (ஆம் அல்லது இல்லை) என கேட்கப்பட்டுள்ளது. இதை நிரப்பி, குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி கையெழுத்து போட்டு உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் நாளை (17-ந் தேதி) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. அங்கு விண்ணப்பத்தை வாங்கி, பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இவர்கள் அளித்த விண்ணப்பத்தை ரேஷன் கடைகளில் உள்ள உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 2 பேர் உறுதி செய்து, தேவைப்பட்டால் குறிப்பிட்ட வீட்டுக்கும் வந்து சோதனையும் செய்வார்களாம். உண்மையில் விண்ணப்பதாரர் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வங்கி மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+