அன்புச்செழியன் உள்பட 5 சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான வீடுகளில் 2வது நாளாக வருமான வரி சோதனை
சென்னை: திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஆர்.பிரபு ,ஞானவேல் ராஜா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.
சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தை கடந்து விடிய விடிய வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தீவிர கனமழை பெய்யும்.. தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும்
போலி கணக்கு மூலம் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்து குற்றச்சாட்டை தொடர்ந்து சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, டி.ஜி. தியாகராஜன், சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ள சென்னை, மதுரை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணக்கில் வராத பணம்
மதுரையை சேர்ந்த தொழிலதிபர் அன்புசெழியன் தமிழ் சினிமா துறையில் அசைக்க முடியாத பைனான்சியராக உள்ளார். அவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். அதோடு இல்லாமல் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் பைனான்ஸ் செய்து வருகிறார் அன்புசெழியன்.
பிகில் வசூல்
கடந்த 2020ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்த பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் இயக்கியது. பிகில் திரைப்படம் தயாரிக்க முழு பணத்தையும் தொழிலதிபர் அன்புசெழியன் தான் இந்த நிறுவனத்துக்கு கொடுத்தார். ஆனால், பிகில் திரைப்படத்தின் வருமான வரிக்கணக்கை முறையாக மத்திய அரசுக்கு கணக்கு காட்டாமல் பல நூறு கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிக்கியது எவ்வளவு
அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், 2020ம் ஆண்டு சினிமா பைனான்சியர் அன்புசெழியன், அவர் நடத்தும் கோபுரம் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், அன்புசெழியன் வீடு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்த போது, ரூ.300 கோடிக்கு ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தாகவும், கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
சட்ட விரோத பண பரிமாற்றம்
இதற்கிடையே, நடிகர் கமல் நடித்து வெளியான 'விக்ரம்2' மற்றும் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படத்துக்கு அன்புச்செழியன் தான் முழு பணம் பைனான்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பல கோடி ரூபாய் பணம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.
தி.நகரில் பரபரப்பு
அன்புச்செழியன் வீடு மட்டுமல்லாது பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, எஸ்.ஆர். பிரபு, ஞானவேல்ராஜா, டி.ஜி.தியாகராஜன், சீனிவாசனுக்கு சொந்தமான வீடுகள், சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜாவின் 'ஸ்டூடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் என இரண்டு பேரின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
பல இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையால் இதனால் தி.நகரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முதல் மதுரை வரை
அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை தி.நகர் ராகவையா சாலையில் வீடு, அதே சாலையில் அமைந்துள்ள கோபுரம் பிலிம்ஸ் நிறுவன அலுவலகம், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புசெழியன் சகோதரர் அழகர்சாமி வீடு, மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்புசெழியன் பங்களா வீடு, தெற்கு மாசி வீதியில் உள்ள அவரது பைனான்ஸ் அலுவலகம், செல்லூரில் உள்ள அவரது கோபுரம் பிலிம்ஸ் நிறுவன அலுவலகம், மதுரையில் உள்ள திரையரங்கம் என அன்புசெழியனுக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடிய சோதனை நடைபெற்றது.
கிடுக்கிப்பிடி விசாரணை
இந்த சோதனையில் கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலாண்டில் அன்புசெழியன் பைனான்ஸ் நிறுவனம், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த கணக்குகளை வைத்து, கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் வரவு செலவு கணக்குகள், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து எந்தெந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு கோடி ரொக்கமாக வழங்கப்பட்டது. அதற்கான கணக்குகள், கடன் கொடுத்த பணத்திற்கான வரவுகள் குறித்த விபரங்கள் ஒப்பீடு செய்யப்பட்டது.
2வது நாளாக நீடிக்கும் சோதனை
விடிய விடிய நடைபெற்ற சோதனையில் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த கணினி, ஹாட் டிஸ்க்கள், பென்டிரைவ், பல்வேறு வங்கிகளின் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது நாளாக இன்றைய தினமும் பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த சோதனை சினிமா தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.