ஒரே நேரத்தில்.. ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை!
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் ஜாபர் சாதிக் மற்றும் அவருக்குத் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ஜே.எஸ்.எம் விடுதி, அண்ணா சாலையில் உள்ள ஒரு விடுதி மற்றும் எத்திராஜ் கல்லூரிக்கு அருகிலுள்ள ஜே.எஸ்.எம் விடுதியின் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கின் இல்லத்திலும் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தியதாக, சினிமா தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்து இருந்தனர்.
இநிந்லையில் காபர் சாதிக் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் இன்று ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். சென்னையில் ஜேஎஸ்எம் விடுதி உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்தது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications