Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலாவின் வரிச்சலுகை.. குவியும் வாழ்த்து.. காங்கிரஸை காப்பியடித்த பாஜக? பட்ஜெட் ஆதரவு - எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்தவகையில், எதிர்ப்பு - ஆதரவு என இரண்டு வகையிலான கருத்துகள் எழுந்துள்ளன.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.. இதில் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்பினை பெற்றுள்ளது.

Nirmala Sitharaman union budget 2024

குறிப்பாக, தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கப்பட்டு வருகின்றன.

பழைய வருமானவரி: ஆனால், சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து தலைவர்கள் பலர் வரவேற்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மூத்த தலைவர் அமித்ஷா கூறும்போது, "எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கிறது. தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தயாரித்து உள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம், வளர்ந்த தேசமாக மாறும்" என்றார்.

அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இது அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் வளர்ச்சி வளர்ச்சி என வருகிறது... பாஜகவின் 10 ஆண்டு பட்ஜெட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி பட்ஜெட் இது. புதிய இந்தியா நோக்கி தேசம் நகர்கிறது" என்று பெருமை தெரிவித்துள்ளார்.

விவசாயம்: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இதுகுறித்து சொல்லும்போது, "இந்த பட்ஜெட் எதிர்காலத்திற்கு ஏற்றது. விவசாயம், கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பட்ஜெட் பற்றி கூறும்போது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்துகிறேன் என்று பூரித்து சொல்லி உள்ளார்.

வரிச்சலுகை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க, பிரதமர் மோடியின் கனவு, பட்ஜெட்டில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இது வளர்ச்சி சார்ந்த பட்ஜெட். நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பீஹார் மற்றும் ஆந்திராவுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ஏன் அலறுகின்றன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, "10 ஆண்டுகால வளர்ச்சியின் ஒருங்கிணைப்பாகவும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார். அதேபோல, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சோமிரெட்டி, "பட்ஜெட் அறிவிப்பை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆந்திரா மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம்: இப்படி கர்நாடக, ஆந்திர மாநில தலைவர்கள், இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ள நிலையில், தமிழகத்துக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக தலைவர்கள் கருத்து கூறியிருக்கிறார்கள்.

அந்தவகையில், இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லும்போது, "2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 30வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வேலை வாய்ப்புக்கான ஊக்கத்தொகை திட்டம் இடம்பெற்று உள்ளது... 11வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சமும் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்றார்.

தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் இதே கருத்தைதான் கூறியிருக்கிறார்.. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. ராகுலின் யோசனைகளை இந்த அரசு காப்பியடித்துள்ளது என்பதை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, காங்கிரஸ் எம்பி சசி தரூர், "பட்ஜெட்டில் பல விஷயங்கள் விடுபட்டுள்ளன. அடிமட்டத்தில் உள்ள 40 சதவீதத்தினரின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. இன்று நம் நாட்டில் சமத்துவமின்மைக்கு தீர்வு காண்பது மிகக் குறைவாக உள்ளது" என்று விமர்சித்திருக்கிறார்..

விலைவாசி: திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் இதுகுறித்து விமர்சிக்கும்போது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நிதியமைச்சர் இந்தப் பிரச்னையை மிகத் தீவிரமாகக் கவனிக்க வேண்டும். உணவு விலைவாசி உயர்வு என்பது சாமானியர்களின் பிரச்சனை. நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாத நிலையில், எதன் அடிப்படையில் இந்த பட்ஜெட்டை தயாரிக்கப்பட்டது என்றார்.

பெண்கள் பயன் அடையும் வகையில் எந்த திட்டமும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி., டிம்பிள் யாதவ் குறை கூறியிருக்கிறார். அதேபோல "விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் வரை, மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை,'' என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

திமுக இளங்கோவன்: திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லும்போது, ''கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்ததோ அதை அப்படியே இந்த முறையும் தொடர்கிறது. இதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 6 பட்ஜெட்டில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இதுவரை நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் பட்ஜெட் இது'' என்று கருத்து கூறியிருக்கிறார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி: அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, இந்த பட்ஜெட்டை காப்பி - பேஸ்ட் என்று விமர்சித்திருக்கிறார்.. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கானது. கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்துவதற்கானது என்றும் சாமானிய மக்களுக்கு எதுவுமில்லை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மற்றும் ஏற்கனவே தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் இருந்து காப்பி, பேஸ்ட் என ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+