பட்ஜெட்டில் 5 குட் நியூசும் இருக்கு.. வருமான வரி, சம்பளம், சேமிப்பு, பென்சன், வேலைவாய்ப்பு
சென்னை: மத்திய பட்ஜெட் 2024ல் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் வேலை தேடுவோருக்கு வருமான வரி, சம்பளம், சேமிப்பு, பென்சன், வேலைவாய்ப்பு என ஐந்து நல்ல விஷயங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றி நேற்றைய பட்ஜெட்டில் கூறிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். 1959 முதல் 1964 வரை நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து, நிர்மலா சீதாராமன் ஏழு பட்ஜெட் உரைகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது சாதனை பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கும், அதற்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளித்திருப்பதாக கூறியுள்ளார். இந்த முறை நாங்கள் பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு , சிறு குறுகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்து கவனம் செலுத்தி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
2024-25க்கான மத்திய பட்ஜெட்டில் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த ஐந்து சூப்பர் திட்டங்களை பற்றி பார்ப்போம்.
வருமான வரிக்கழிவு உயர்வு : பட்ஜெட்டில், புதிய வருமான வரி விதிப்பின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான வரிக்கழிவு ₹50,000ல் இருந்து ₹75,000 ஆக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் புதிய வருமான வரி முறையில் 7.75 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பளம் வாங்குவோர் வருமான வரி செலுத்த வேண்டிய தேவையில்லை.. முன்னதாக கடந்த ஆண்டு 7.25 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் மட்டுமே வரி கட்ட தேவையில்லை என்ற நிலை இருந்தது. இப்போது அது மாறி உள்ளதால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், மாத சம்பளதாரர்கள் வருமான வரி கட்ட வேண்டிய நிலை வராது. அதேநேரம் பழைய வருமான வரி முறையின் நிலையான விலக்கு தொடர்பாக எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
புதிய வருமான வரி முறை அடுக்குகள் மாற்றம்: நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நடப்பு நிதியாண்டிற்கான புதிய வரிப் பிரிவின் கீழ் வருமான வரி அடுக்குகளில் சிறிய அளவிலான தளர்வுகளை அறிவித்தார்.
அதன்படி புதிய வருமான வரி அடுக்குகள் பின்வருமாறு:
₹3 லட்சம் வரை: 0%
₹3 முதல் ₹7 லட்சம் வரை: 5%
₹7 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை: 10%
₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை: 15%
₹12 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை: 20%
₹15 லட்சத்திற்கு மேல்: 30%
இந்த புதிய வருமான வரி அடுக்கு மாற்றங்களின் விளைவாக, புதிய வரிமுறையை தேர்வு செய்யும் மாத சம்பளதாரர்கள் ₹17,500/- வரை வருமான வரியைச் சேமிக்க முடியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் போது கூறினார்.
குடும்ப ஓய்வூதியதார்களுக்கு கழிவு பலன்கள் அதிகரிப்பு: சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும் திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். புதிய வரி விதிப்பின் கீழ், மாத ஊதியதாரர்கள் புதிய வரி முறையில் பெறும் நிலையான கழிவு ரூ,50 ஆயிரத்தில் இருந்து ரூ,75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதைப்போல குடும்ப ஓய்வூதியதாரர்களின் கழிவு பலன்களும் ரூ,15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கிறது. இதன் மூலம் சுமார் 4 கோடி மாத ஊதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன்பெறுவார்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஒரு மாதம் அரசு ஊதியம்: முதல்முறை தொழிலாளர்களுக்கான புதிய திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் அரசு ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ,15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள். ரூ,15,000 முதல் ரூ,1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இந்த பலனை பெறுவார்கள்.
50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: 'முதலாளிகளுக்கு ஆதரவு' என்ற முதலாளியை மையமாகக் கொண்ட திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு சம்பளம் தரும் அனைத்து கூடுதல் வேலைவாய்ப்புகளும் கணக்கிடப்படும். ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிபங்களிப்புக்காக அரசாங்கம் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ,3,000 வரை முதலாளிகளுக்கு திருப்பிச் செலுத்தும். இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது மத்திய அரசு.
சிறந்த 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் 500 சிறந்த நிறுவனங்களில் இளைஞர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை அரசாங்கம் தொடங்கும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்கள்பயன்பெறுவார்கள் என்றார். இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதத்திற்கு ₹5,000 இன்டர்ன்ஷிப் உதவித்தொகை வழங்கப்படும். இது இல்லாமல் ₹6,000 ஒருமுறை உதவியாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications