புதிய வருமான வரி முறையில் 75000 ரூபாய் லாபம்.. அரசு ஊழியர்கள், மாத சம்பளதாரர்களுக்கு நல்ல செய்தி
சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் கால தாமதம் ஆவது குற்றம் அல்ல என்று அறிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய முறை வருமான வரிதாரர்களுக்கு வரிக்கழிவு சலுகையை 50000 ரூபாயில் இருந்து 75000 ஆக அதிகரிக்கப்படுவதாக கூறி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இதன் மூலம் புதிய வருமான வரியில் வரி தாக்கல் செய்வோருக்கு பலன் கிடைக்கும்.
வருமான வரி தாக்கல் செய்யும் ஒவ்வொரும் எதிர்பார்த்த அந்த ஒரு நாள் இன்று வந்துவிட்டது. மாத ஊதியம் வாங்குவோருக்கு வருமான வரி என்ற பெயரில் கணிசமான தொகை பிடிக்கப்படும். அவர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு இன்று மத்திய பட்ஜெட்டில் வந்துள்ளது .

இன்றைய சூழலில் புதிய வரி முறை, இயல்பானதாக (Default) எல்லாருக்குமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழைய வருமான வரிமுறையில் பல்வேறு சலுகைகள் அப்படியே தொடர்கின்றன. ஆனால் புதிய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் 80C, 80D, 24 போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் விலக்குகளை கோர முடியாது. இருப்பினும், நிலையான விலக்கு, குடும்ப ஓய்வூதியம் போன்ற சில விலக்குகள் மட்டுமே இருந்தன.
அதேபோல் புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்துவோருக்கு கழிவுத்தொகை என்ற பெயரில் 50000 கழிக்கப்படும்.அதன்பிறகு உள்ள தொகைக்குத்தான் வருமான வரி கணக்கிடப்படும். ஆனால் வரும் நிதியாண்டு முதல் தனிநபர் வருமான வரியில் 50000 என்பது 75000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மாத சம்பளம் வாங்கும் அடிமட்ட மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் வருமான வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படாது என தெரிகிறது. கிட்டத்தட்ட 25000 ரூபாய் அப்படியே சேமிப்பாக மாறும். அதேபோல் வருமான வரியும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தால் 4 கோடி பேர் பயன்பெறுவார்கள்.
அதே நேரம் வருமான வரி வரம்பு இந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் வரை வரி இல்லை. 3 முதல் 7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 7 முதல் 10 லட்சத்திற்கு 10 சதவீதமும், 10 முதல் 12 லட்சத்திற்கு 15 சதவீதமும், 12 முதல் 15 லட்சத்திற்கு 20 சதவீதமும் வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதிய முறையை பொறுத்தவரை ஓரளவு வருமானம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் பல்வேறு வகையான வரிச்சலுகை பெற முடியாது. பழைய வருமான வரி முறையின் கீழ் சரியான முறையில் முதலீடு செய்தால் 10 லட்சம் சம்பளம் வாங்குவோர் கூட 10 பைசா கூட வரியாக கட்ட தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய வருமான வரி முறையைப் பொறுத்தவரை பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். PPF அல்லது ELSS போன்றவற்றில் முதலீடுகளுக்கான விலக்குகளை பெற பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை குறைக்க முடியும். அதேபோல் லைப் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டுகிறீர்கள் என்றால் அதையும் விலக்காக 80சியில் கோர முடியும். குழந்தைகளின் கல்வி கட்டணம், வீட்டு வாடகை போன்றவற்றை 80 சியில் காட்ட முடியும்.
இதேபோல் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் குடும்பத்திற்கு 25000 வரையிலும், முதியவர்கள் என்றால் 50000 வரை வருமான வரியில் கழிக்க முடியும்.. பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000த்தை என்பிஎஸ்இல் முதலீடு செய்து' , ரூ. 1.5 லட்சம் வரம்பிற்கு மேலும் வரி விலக்கு பெற முடியும் (2 லட்சம்). இதேபோல், உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக நீங்கள் லீவ் டிராவல் அலவன்ஸை வாங்குகிறீர்கள் என்றால் , உங்கள் பயணத்திற்காக செலவழிக்கப்பட்ட பணத்தை விலக்காக கோரி சேமிக்க முடியும். அதேபோல் வீட்டுக் கடன் வாங்குபவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் 24 (பி) பிரிவின் கீழ் வட்டி செலுத்துவதன் மூலம் ரூ. 2 லட்சம் வரை விலக்கு கோர முடியும். இப்படி 10 லட்சம் வரை வருமானத்திற்கு வரி செலுத்தாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications