செந்தில் பாலாஜியின் மாஜி உதவியாளர் வீடு முதல் மேட்டூர் அனல் மின் நிலையம் வரை.. பரபர ஐடி ரெய்டு
சென்னை: வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடாது கருப்பாக துரத்தி வருகிறது. செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் தொடங்கி மேட்டூர் அனல் மின் நிலையம் வரை வருமான வரித்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் புதன்கிழமை காலையிலேயே பரபரப்பு பற்றிக்கொண்டது. மழைக்காலம் என்பது போல ரெய்டு காலமாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், எண்ணூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். நாடு முழுவதும் அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் சார்ந்து கோடி கணக்கில் முதலீடு செய்து வரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்றது.
சிறுசேரியில் உள்ள ராதா இன்சினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பலத்த பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் செந்தில் பாலாஜியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் காசி வீட்டிலும், ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இதே போல மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அனல் மின் நிலையத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தது, கன்வேயர் பெல்ட்டின் தரம், ஒப்பந்தம் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை ரெய்டு இரவு 8.30 மணிவரை நீடித்தது. பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications