அது எப்படி குமாரு.. ஏப்ரல், மே மாதங்களில் பத்திரப்பதிவில் நடந்த மேஜிக் .. அதிகாரிகள் திகைப்பு
சென்னை: பத்திரப்பதிவு துறையின் வருமானம் கடந்த 2 ஆண்டுகளாக மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த ஏப்ரல், மே மாதங்களை பார்க்கும் போது, கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது. தேர்தல் காரணமாக பத்திரப்பதிவு குறைந்த போதிலும் வருவாய் கடந்த ஆண்டைவிட அதிகம் என்கிறார்கள் அதிகாரிகள்.
பத்திரப்பதிவு துறையின் வருமானங்கள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2018-19-ம் ஆண்டில் 25 லட்சத்து 73 ஆயிரத்து 478 பத்திரப்பதிவுகள் மூலம் அரசுக்கு 11 ஆயிரத்து 71 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்த நிலையில், அந்த சாதனை 2023ல் முறியடிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 207 கோடி வருமானம் வந்துள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது பத்திரப்பதிவு கட்டணங்கள் மாற்றியமைப்பு, முத்திரைத்தாள் கட்டணம் குறைப்பு, பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் முயற்சிகள், சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு உள்பட பல்வேறு காரணங்களால் அதனால் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 34 லட்சத்து 41 ஆயிரத்து 248 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு 2022-23-ம் நிதியாண்டில் 17 ஆயிரத்து 296 கோடியே 84 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 207 கோடி வருமானம் வந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த ( 2024-25-ம்) நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரத்து 750 கோடி வருவாய் கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கினை எய்தி விட்டால் கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டு 50 சதவீத வளர்ச்சிக்கு மேல் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த இலக்கினை அடைய பத்திரப்பதிவுத்துறை தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த நிதி ஆண்டு தொடங்கிய முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் காரணமாக பத்திரப்பதிவு முழுமையாக குறைந்து போனது. தற்போது வழிகாட்டி மதிப்பின் திருத்த பணிகளை பத்திரப்பதிவுத்துறை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் என்ற தகவல்கள் பரவி உள்ளது. அதனால் மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு பிறகு பத்திரப்பதிவு வேகம் அடைந்துள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 921 பதிவுகள் மூலம் ரூ.1,301 கோடியும், மே மாதத்தில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 825 பத்திரப்பதிவுகள் மூலம் ரூ.1,328 கோடியும் என மொத்தம் 2 மாதங்களில் 5 லட்சத்து 33 ஆயிரத்து 746 பதிவுகள் மூலம் ரூ.2 ஆயிரத்து 629 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டு தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 438 பதிவுகள் மூலம் ரூ.1,306 கோடியும், மே மாதத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 935 பதிவுகள் மூலம் ரூ.1,593 கோடியும் என மொத்தம் 2 மாதங்களில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 373 பதிவுகள் மூலம் ரூ.2 ஆயிரத்து 899 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பத்திரப்பதிவு 24 ஆயிரத்து 103 பதிவுகள் குறைந்துள்ள போதிலும் வருவாய் ரூ.270 கோடி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications