கொரோனா வைரஸ்.. ராமதாஸ் போட்ட மூன்று டூவிட்.. சொன்ன மூன்று முக்கிய விஷயங்கள்! ..
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தமட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவின் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் தனது டுவிட் பதிவில் தயவு செய்து கொரோனா வைரசை அரசியலாக்காதீர். கொரோனாவை அரசியலாக்குவதை தனிமைப்படுத்தி ஒதுக்கி வையுங்கள். என்று உலக சுகாதார நிறுவன தலைமைச் செயலாளர் மருத்துவர் டெட்ராஸ் கூறியிருந்த கருத்தை பதிவிட்டிருந்தார்.. மேலும் கொரோனா பாதித்த ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால், அவரிடமிருந்து ஒரு மாதத்தில் 406 பேருக்கு பரவும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட எச்சரிக்கையையும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 15 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் 2%க்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 35,198 பேருக்கு கொரோனா தொற்று, 2,381 பேர் உயிரிழப்பு என்ற புள்ளிவிபரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவே இத்தகைய பேரழிவை சந்திக்கும் போது, நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள சமூக இடைவெளி தான் ஒரே தீர்வு. ஊரடங்கை கடைபிடிப்போம்; உயிர் காப்போம்!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்? கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்