இனிமேல் வீடுகள் விலையும் உயர்கிறது.. கட்டிட அனுமதி வரைபட கட்டணம் உயர்வு... ஜி.கே. வாசன் கடும் கோபம்
சென்னை: வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அந்தவகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அரசுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதாக தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்தக் கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லையில்லை என்றும், சீரமைப்பு என்று சொல்லிக் கொண்டு மக்கள் மீது கூடுதல் நிதியை சுமத்துவது நியாயமற்ற செயல் என்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
அண்ணாமலை: பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்க வேண்டுமே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை கிடையாது, அதனால், உடனடியாக, சுயசான்று அடிப்படையில்வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டணஉயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியிருக்கிறார்
இரக்கமே இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சொந்த வீடு எனும் கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியிருக்கிறார்.
வாசன்: இந்தநிலையில், தமாகா தலைவர் ஜிகே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "தமிழக அரசு, வீடு கட்ட விரும்பும் பொது மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. அரசு, சென்னை உட்பட்ட மாநிலம் முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதியை 100 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி ஆணை வெளியிட்டிருப்பது நியாயமில்லை.
காரணம் ஏற்கனவே பத்திரப்பதிவு கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, தண்ணீர் வரி உயர்வு மூலம் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றிய அரசு, இப்போது கூடுதலாக கட்டிடம் கட்டுவதிலும் கட்டணத்தை உயர்த்தி பொது மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
கட்டண உயர்வு: கடந்த மாதம் தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 2,500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில் மற்றும் 3,500 சதுர அடி வரையிலான பரப்பளவிலான நிலத்தில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.
தொடர்ந்து சென்னையில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும்.
கட்டிட வரைபட கட்டணம்: கட்டிட வரைபட கட்டண உயர்வால் சொந்தமாக வீடு கட்ட நினைப்பவர்கள், வீடு கட்டி விற்க நினைப்பவர்கள் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் தொழிலானது பெருமளவு பாதிக்கும். வீடு இல்லாமல் புதிதாக வீடு கட்டலாம் எனக்காத்திருந்த சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத்தான் இந்த கட்டண உயர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் ஏழை எளிய மக்களை வீடு கட்ட முடியுமா என யோசிக்க வைத்துள்ளது இந்த கட்டண உயர்வு. எனவே தமிழக அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ள கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications