பாஜக யுக்திகளுக்கு இந்தியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. கார்த்தி சிதம்பரம் ஓபன் டாக்!
சிவகங்கை: "பாஜக யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை. இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டை தவிர, மற்ற மாநில கட்சிகள் எல்லாம் ஒருமித்த கருத்திற்கு வரவில்லை" என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "பாஜக யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை. இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டை தவிர, மற்ற மாநில கட்சிகள் எல்லாம் ஒருமித்த கருத்திற்கு வரவில்லை. சரத்பவார், மம்தா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் முழுமையாக இணைந்து செயல்படுவதில்லை. இதை மையப்படுத்தி தான் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், இந்தியா அளவில் இண்டியா கூட்டணி எந்தளவில் இருக்கிறது என்பதை தான் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாட்டில் கடந்த 3 தேர்தல்களில் எங்கள் கட்சி வெற்றி பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பாஜக கையாளும் யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது நீதிமன்ற தீர்ப்பு. இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நிதி கொடுப்பதை யாரும் குறை சொல்ல கூடாது. பொள்ளாச்சி வழக்கு, அண்ணா பல்கலைக்கழக வழக்கு இரண்டுமே மிரட்டி செய்யப்பட்ட காரியம்தான் என்றாலும் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கையும் நியாயமான முறையில் நடத்தி நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை சீர்படுத்த வேண்டும் என்றால் மின்சார வாரியத்தில் இருக்கும் 1 லட்சம் கோடி அளவிலான கடனை குறைக்க வேண்டும்.
கல்விக் கடன் தள்ளுபடி என மாநில அரசு வாக்குறுதி கொடுத்தாலும் கல்வி கடன்களை தள்ளுபடி செய்யும் அதிகாரம் என்பது மத்திய அரசிடமே உள்ளது. அதற்கு அவர்களுக்கு மனமில்லை.
15 லட்ச ரூபாய் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் போடப்படும் என்பது எப்படியோ அப்படித்தான் கல்விக்கடன் ரத்து, மாதா மாதம் மின்சார கட்டணம் கணக்கீடு ஆகிய வாக்குறுதிகளை மாநில அரசு வழங்கியுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மற்ற திட்டங்களை விட நேரடியாக பணம் கொடுப்பது மிகச் சிறந்தது. இதன்மூலம் உள்ளூர் பொருளாதாரம் வளரும்." என்றார்.
முன்னதாக இந்தியா கூட்டணி குறித்துப் பேசி இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "இந்தியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை" என்று பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications