என்னங்க சொல்றீங்க? மலை மலையாய் தங்கத்தை வாங்கி குவித்த இந்தியா.. வெள்ளி மேல் விலகாத மோகம்! சிக்கல்?
சென்னை: 2025-26 நிதியாண்டில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டில், தங்கம் இறக்குமதி மதிப்பு சுமார் 24 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த உயர்வு, தங்கத்தின் மீதான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2025 - 26 நிதியாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி மதிப்பு சுமார் 7,198 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயில் கணக்கிட்டால் இது சுமார் ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

முந்தைய 2024 - 25 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி சுமார் 5,800 கோடி டாலராக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இது மிகப்பெரிய அளவிலான கொள்முதல் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இதனை இந்தியா சாதித்திருப்பதையும் கவனிக்கத்தக்கது.
தங்க இறக்குமதி
குறிப்பாக, இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இறக்குமதி மதிப்பு உயர்ந்திருந்தாலும், தங்கத்தின் மொத்த அளவு குறைந்துள்ளது என்பது தான். முந்தைய நிதியாண்டில் சுமார் 757 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2025-26 நிதியாண்டில் அது சுமார் 721 டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததே இதற்கான முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி இறக்குமதி
ஒரு கிலோ தங்கத்தின் சராசரி விலை கடந்த ஆண்டில் இருந்த அளவிலிருந்து கணிசமாக உயர்ந்ததால், அளவு குறைந்திருந்தாலும் மொத்த மதிப்பு அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி இறக்குமதியிலும் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வெள்ளி இறக்குமதி சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 7,000 டன்னுக்கு மேற்பட்ட வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கணக்குகள் தெரிவிக்கின்றன.
நகைத் தொழில்
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கணிசமான உயர்வாகும். நகைத் தொழில் மற்றும் தொழில்துறை தேவைகளே வெள்ளி இறக்குமதி அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அதிக அளவில் தங்கம் வழங்கும் நாடுகளில் ஸ்விட்சர்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த தங்கத்தில் சுமார் 40 சதவீதம் இந்த நாட்டிலிருந்தே வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாடுகளிலிருந்து வரும் தங்கம் இந்தியாவின் நகைத் தொழில்துறைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை
இந்த அளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி அதே அளவில் அதிகரிக்காத சூழலில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை உயர வாய்ப்பு உள்ளது. சமீபத்திய கணக்குகளின்படி, வர்த்தக பற்றாக்குறை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது நடப்பு கணக்குப் பற்றாக்குறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தங்கம் இறக்குமதி
இதே நேரத்தில், இந்தியாவில் நகைத் தொழில் மிகப்பெரிய துறையாக இருப்பதால், தங்கத்திற்கான தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. திருமணங்கள், விழாக்கள் மற்றும் முதலீட்டு நோக்கங்கள் ஆகியவற்றுக்காக மக்கள் தங்கத்தை அதிகமாக வாங்கும் பழக்கம் தொடர்கிறது. இதுவே தங்கம் இறக்குமதி அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு
இந்த சூழலில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக இறக்குமதி சுங்கவரி மாற்றம், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் தங்கத்தின் பயன்பாட்டை சீர்படுத்தும் கொள்கைகள் போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், நகைத் தொழில் மற்றும் முதலீட்டு தேவைகள் அதிகமாக உள்ள நிலையில், தங்கம் இறக்குமதி குறைவது எளிதான விஷயம் அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications